Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!

Continues below advertisement

சட்டம் ஒழுங்கு சரியில்லை, தலைநகரிலேயே இப்படியா என எதிர்கட்சிகள் சீண்ட, சீனியர்களேல்லாம் வேண்டாம், அருண் ஐபிஎஸ்-ஐ கூப்பிடுங்க என்று யாரிடமும் ஆலோசிக்காமல் தமிழகத்தில் டிஜிபிக்கு அடுத்த நிலையில் பவர்புல்லாக இருந்தவரை, சென்னையில் மட்டும் முழு கிவனத்தை செலுத்துங்கள் என்று பொறுப்பை வழங்கியுள்ளார் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஏ. அருண் ஐபிஎஸ் தான் இனி சென்னை மாநகர காவல் ஆணையர். திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, அருணுக்கு முக்கியமான பவர்ஃபுல் போஸ்டிங்கள் தரப்படும். அதற்கு காரணம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, குற்ற புலனாய்வு என எந்த துறையாக இருந்தாலும் அதில் அதிரடிக்கு பெயர் போன ஆஃபிசர்-தான் அருண்.

1998 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான அருண் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சென்னையில் படித்துவிட்டு அதற்கு துளியும் தொடர்பில்லாத காவல்துறையை தன் வாழ்நாள் பணியாக தேர்வு செய்துகொண்டவர். அதற்கு காரணம், காக்கி உடையின் மீது அவருக்கு இருந்த காதல். அதனால்தான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து காவல்துறை மேலாண்மை படிப்பில் பட்டயம் பெற முடிந்தது. 

ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடிந்ததும் அவருக்கு போஸ்டிங் கிடைத்த இடம் நாங்குநேரி. ஒரு சிறு பொறி பட்டாலே கலவரம் ஆகிவிடும் கந்தக பூமி. அங்குதான் ஏ.எஸ்.பியாக தன்னுடைய பணியை தொடங்கினார் அருண்.  பின்னர் அதே போன்று பதற்றமான சூழல் கொண்ட தூத்துக்குடியிலும் அவர் சர்வீஸ் செய்தார். எஸ்.பியாக அவருக்கு பிரோமோஷன் கிடைத்ததும் கரூர், திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றினார். அந்த எல்லா கால கட்டங்களிலும், சட்டம் ஒழுங்கிற்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்றது.

பின்னர் அவர் சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பிறகு அண்ணா நகர், செய்ண்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளிலும் துணை ஆணையராக பணியாற்றினார். அப்போதெல்லாம், அவர் இரவில் எப்போது அழைப்பார், எங்கு சென்று ஆய்வு செய்வார் என்று பதறியபடியே காவல்நிலைய போலீசாரும், ரோந்து போலீசாரும் இருப்பார்கள். திருச்சி சரக டிஐஜி, சென்னை போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு இணை ஆணையர், இரண்டு முறை திருச்சி மாநகர காவல் ஆணையர், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் என பல்வேறு பொறுப்புகள் மாற்றப்பட்டாலும், முக்கிய பொறுப்புகளில் மட்டுமே ஒவ்வொரு முறையும் அரசுகள் அவரை பணியில் அமர்த்தியது.

ஏடிஜிபியாக அவர் 2022ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டப்போது தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு தலைவராகவும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த தாமரை கண்னன் ஓய்வு பெற்றதை அடுத்து அதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த பதவியை திமுக அரசு அருணுக்கு கொடுத்து கவுரவித்தது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் ஏற்படும் குற்றங்களை கவனித்தும் போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அருண் எடுத்து வந்தார். 

பல இடங்களில் நில பிரச்னையில் போலீசார் தலையிட்டு கட்டபஞ்சாயத்து செய்யும் தகவல்கள் அருணுக்கு வர, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் பிரச்னைகளில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அருண். அதோடு, அப்படி ஏதும் தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாவட்ட எஸ்.பியின் அனுமதியை பெற வேண்டும் என்று அவர் அனுப்பிய சர்குலர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது

இந்நிலையில் அண்மையில் தமிழக காவல்துறையின் பெண் போலீசாரை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கைது செய்து, பெண் காவலர்களை வைத்தே நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்ததன் பிண்ணனியிலும் அருண் IPS-ன் ஆர்டர்கள் இருந்தது.

இப்படிபட்ட சூழலில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன்பாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார் ஸ்டாலின். ஒரு பக்கம் கள்ளச்சாராய மரணம், இன்னோரு பக்கம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கூலிப்படையால் வெட்டி கொள்ளப்பட்டுள்ள சம்பவம் என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.

எதிர்கட்சிகளின் குடைச்சல் ஒருப்பக்கம் இருக்க, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக தெரிவித்துள்ளது தேசிய செய்தியாக மாறியுள்ளது.

அதனால் கடுமையாக அப்செட் ஆகியுள்ள ஸ்டாலின், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்துவிட்டு சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ்-ஐ நியமித்துள்ளார். இந்நிலையில் இவரிடமிருந்து இனி அதிரடிகள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram