G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
செங்கல்பட்டில் தவெக-வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் லட்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில், உடனடியாக கட்சியின் அடிப்படி உறுப்பினர் பதவியிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில், ஒப்பந்ததாரர் நவீன் என்பவர் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக 9.80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போட்டு சாலை பணிகளையும் முடித்துள்ளார்.
சாலை பணிகள் முடிந்தும் பில் பாஸ் செய்யாமல் நிலுவையில் இருப்பதால் நவீன், தவெக ஊராட்சி மன்ற தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசமியை நாடியுள்ளார்.
அப்போது, வீராசாமி அவரிடம் 2 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு பின்னர் ஒரு லட்சத்து என்பதாயிரத்துக்கு இறங்கிவந்தார்.
அதையும் நவீன், வீராசாமிக்கு இரண்டு முறை தலா 50,000-மாக G-pay வில் அனுப்பினார். மீதி முப்பதாயிரத்தை நவீன் நேரில் சென்று வீராசாமி அலுவலகத்தில் கொடுத்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோ பேசுபொருளாகவே, இதுதான் லஞ்ச ஊழலற்ற தவெக அரசா என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இருப்பினும் வீராசாமி, கவுன்சிலரும் திமுகவினரும் சேர்ந்து தனக்கெதிராக சதி செய்வதாகவும், தன்னுடைய பணத்தை தான் நவீன் திருப்பிக் கொடுத்ததாகவும் செய்தியாளர்காளிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், கட்சியிலிருந்தே வீராசாமி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து வீராசாமி நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.