Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளை
சுங்கச்சாவடி அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லாரியை மீட்க சினிமா பாணியில் 15 கிலோமீட்டர் தூரம் லாரியில் தொங்கிய படி சென்ற போலீசாரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் சேர்ந்த அன்பு என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது ஓட்டுநர் இன்று காலை செங்கல்பட்டு பகுதியில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வண்டி வந்தபோது, பாஸ்ட் ட்ராக்கில் போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓரம் கட்டிய ஓட்டுனர் உடனடியாக இதுகுறித்து, உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பாஸ்ட் ட்ராக்கில் ரீசார்ஜ் செய்வதற்காக காத்திருந்தார்.
அந்த சமயத்தை பயன்படுத்திய சுங்கச்சாவடி அருகே இருந்த மர்ம நபர் திடீரென லாரியை எடுத்து, சென்னையை நோக்கி அதி விரைவாக இயக்கத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுநர் உடனடியாக இதுகுறித்து, அருகில் இருந்த காவலரிடம் தெரிவிக்க, இருசக்கர வாகனத்தில் ஒருபுறம் போலீசார் லாரியை வேகமாக பின் தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது லாபகமாக போலீசார் ஒருவர் லாரியில் ஏறி, ஓட்டுனரை லாரியிலிருந்து கீழே இறக்க முயற்சி செய்தார். ஒரு வழியாக மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றே போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் துரத்தி சென்று சம்பந்தப்பட்ட மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.