மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், மாநில அளவில் நடத்தப்பட்ட லோக்போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக 'உதயசூரியன்' மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற  முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து தமிழக தேர்தலில் வென்று ஆட்சியில் அமரப்போவது யார் என்பது குறித்து லோக்போல் மெகா கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கிய இந்த மெகா சர்வேயின் முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 181 முதல் 189 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 40.1 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்று வலுவான கூட்டணியாக திமுக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 38 முதல் 42 இடங்களை மட்டுமே பெறும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த தேர்தல்களைக் காட்டிலும் அதிமுகவின் வாக்கு வங்கி 29 சதவீதமாகக் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய ட்விஸ்டாக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்க இடங்களைக் கைப்பற்றும் என முடிவுகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் தேர்தலிலேயே 23.9% வாக்கு சதவீதத்தை தவெக பெறும் எனவும், 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கத் துடிக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி 4.9% வாக்குகளைப் பெறும் என்றாலும், ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாது என இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola