புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள்: தமிழ்நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு! உங்க ஊர் இருக்கா?
திருச்சிராப்பள்ளி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் பயணிகள் ரயில்களின் சேவை வாரத்திற்கு ஆறு நாட்களில் இருந்து இனி தினசரி சேவையாக மாற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள் மற்றும் சில ரயில்களின் சேவை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று (மார்ச் 6) தமிழ்நாட்டில் நான்கு புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவை, பாலக்காடு - பொள்ளாச்சி மின்சார ரயில், மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில், போத்தனூர் - தன்பாத் இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூரு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.
மேலும், திருச்சிராப்பள்ளி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் பயணிகள் ரயில்களின் சேவை வாரத்திற்கு ஆறு நாட்களில் இருந்து இனி தினசரி சேவையாக மாற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாரத்திற்கு மூன்று முறை மட்டும் இயக்கப்பட்டு வந்த சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில், இனி வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும். மங்களூரு சென்ட்ரல் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உடுமலைப்பேட்டை மற்றும் பரமக்குடி ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். அதேபோல், தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் பண்ருட்டி நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும்.

புதிய ரயில் சேவைகள், குறிப்பாக மயிலாடுதுறை - காரைக்குடி மற்றும் தன்பாத் - போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை தெற்கு மாவட்ட பயணிகள் மற்றும் ரயில்வே ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். மண்டல ரயில்வே பயனர் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே. பாண்டியராஜா கூறியதாவது, பட்டுகோட்டை மற்றும் திருவாரூரை இணைக்கும் காரைக்குடி - மயிலாடுதுறை ரயில் சேவை என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்தது, அது தற்போது நிறைவேறியுள்ளது. போத்தனூர் - தன்பாத் அம்ரித் பாரத் ரயில், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வணிக ரீதியாக பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
ரயில் பயணிகள் மேலும் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, பாலக்காடு - பொள்ளாச்சி ரயில் சேவையை பழனி வழியாக திண்டுக்கல் வரை நீட்டிக்க வேண்டும். கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருவதால் வெறும் 60 கி.மீ தூரம் மட்டுமே இயங்கும் இந்த ரயிலை 120 கி.மீ வரை நீட்டித்தால் அது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று வலியுறுத்தியுள்ளனர்.























