தென் மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! மதுரை வழியாக மங்களூரு செல்லும் புதிய ரயில்கள்: முழு விபரம் இதோ!
மதுரை வழியாக மங்களூரு - திருநெல்வேலி மற்றும் மங்களூரு - ராமேஸ்வரம் ஆகிய இரண்டு புதிய வாராந்திர ரயில் சேவைகளைத் தொடங்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மதுரை வழியாக மங்களூரு - திருநெல்வேலி மற்றும் மங்களூரு - ராமேஸ்வரம் ஆகிய இரண்டு புதிய வாராந்திர ரயில் சேவைகளைத் தொடங்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரை வழியாக மங்களூரு - ராமேஸ்வரம் இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வாராந்திர ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாத நிலையில், மதுரை வழியாக மங்களூரு - திருநெல்வேலி - மங்களூரு வாராந்திர ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷனை அடையும்.
பயணத்தின் போது, மாலை 5.55 மணிக்கு மதுரை வந்தடைந்து, மாலை 6.00 மணிக்கு மங்களூரு நோக்கிப் புறப்படும். இந்த ரயிலானது வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு மங்களூருவிலிருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு மதுரை வந்தடைந்து, மாலை 4.35 மணிக்கு திருநெல்வேலி நோக்கிப் புறப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மதுரை உட்பட மொத்தம் 20 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, ஷொரனூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவை முக்கிய நிறுத்தங்களாகும். மங்களூரு சென்ட்ரல் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16621/16622) மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தாமதமானது. தற்போது இந்த இரண்டு சேவைகளும் (ராமேஸ்வரம் மற்றும் திருநெல்வேலி ரயில்கள்) மார்ச் 11-ம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மங்களூரு சென்ட்ரல் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இந்த ரயில் சேவை ஏப்ரல் 2024-ல் அனுமதிக்கப்பட்டது. வண்டி எண் 16622 சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும். வண்டி எண் 16621 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும்.
இந்த ரயிலுக்கு திரூர், உடுமலைப்பேட்டை மற்றும் பரமக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவைகள் செயல்பாட்டுக்கு வரும்போது, தென் தமிழகத்திலிருந்து மங்களூரு மற்றும் வட கேரளாவுக்கு நேரடி இணைப்பு கிடைக்கும். குறிப்பாக, ராமேஸ்வரம் - மங்களூரு ரயில், மங்களூரு மற்றும் வட கேரளா இடையே இயக்கப்படும் முதல் நேரடி ரயிலாக அமையும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















