நமது மொபைல் போன் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதி ஆகிவிட்டது. நமது தினசரி டன்சோ ஆர்டர்கள் தொடங்கி கொரோனா காலத்தில் அலுவலக வேலை வரை அனைத்தையும் ஸ்மார்ட் ஃபோன் மூலமாகவே நம்மால் செய்துவிடமுடியும். சாதாரண வேலை முதல் அதிகாரப்பூர்வமான வேலை வரை அனைத்தையும் மொபைலிலேயே முடித்துவிடும் சூழலில் அதை நாம் சரியாகக் கையாள வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. இது மொபைல் போன் பயனாளர்கள் உணர்ந்ததே. போன் உபயோகிப்பவர்கள், கேம் விளையாட, ஆன்லைன் புக்கிங் செய்ய என அவ்வப்போது புதுப்புது அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்வார்கள். ஆனால் ஒருமுறை உபயோகப்படுத்திய பிறகு பெரும்பாலும் இந்த அப்ளிகேஷன்களை அவர்கள் உபயோகிப்பதே இல்லை. இப்படி அப்ளிகேஷன்களில் இருந்து வரும் நோட்டிபிகேஷன்கள் நமது பொறுமையை அதிகம் சோதிக்கும். உதாரணத்துக்கு வணிகரீதியான ஆப்களைப் பயன்படுத்தினால் அதிலிருந்து தொடர்ச்சியாகவோ அல்லது அறிவிப்புக்காகவோ, விளம்பரத்துக்காகவோ நோட்டிஃபிகேஷன் வந்தபடி இருக்கும். இந்த நோட்டிஃபிகேஷன்களுக்கு இடையே நமது வங்கிக் கணக்கு நோட்டிஃபிகேஷன், மொபைல் பில் கட்டண நோட்டிஃபிகேஷன் என முக்கிய அறிவிப்புகளை தவறவிட்டிருப்போம். இப்படியான சூழலில் கவனமாக இருப்பது எப்படி? 


மொபைலில் நாம் அவ்வப்போது செயலிகளை டவுன்லோட் செய்வது போல அவ்வப்போது அவற்றை நீக்குவதும் நல்லது. நாம் பயன்படுத்தாத நிறைய ஆப்கள் வழியாகத்தான் நமக்கு அறிவிப்புகள் வரும். அப்படியான ஆப்களை முதலில் நீக்குவது நல்லது. நாம் நிறையப் பயன்படுத்தாத செயலிகளில் இருந்துதான் சில சமயங்களில் தேவையில்லாத பல நோட்டிபிகேஷன்கள் வரும்.எனவே நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை முதலில் நீக்க வேண்டும். இதுதவிர முக்கிய ஆப்களில் இருந்தும் சில சமயம் நெருக்கடியான அறிவிப்புகள் வரும்.அவற்றை தவிர்க்க செட்டிங்ஸ்கு சென்று மாற்றிக் கொள்ளலாம். 



மொபைல் போனில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குச் சென்று அதில் இருக்கு ஆப் நோட்டிஃபிகேஷன் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.அதில் வரிசையாக சில ஆப்களைக் காண்பிக்கும். இவற்றில் நமக்குத் தேவையான ஆப்ளிகேஷன்கள் எது தேவையற்றது எது என்பதை முதலில் தேர்வு செய்துகொள்ள வேண்டும். தேவையற்ற ஆப்களை uninstall செய்து நீக்கிக் கொள்ளலாம். இதையடுத்து தேவையான ஆப்களில் இருந்து வரும் நோட்டிபிகேஷன்களைத் தவிர்க்க அவற்றின் அருகில் 'Opt in - Opt Out' பட்டனைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவற்றில் நாம் நோட்டிபிகேஷன்கள் வேண்டாம் என்று ஒருமுறை 'Opt Out' செய்துவிட்டால் அதன்பிறகு அந்தக் குறிப்பிட்ட செயலியில் இருந்து எந்த நோட்டிபிகேஷன்களும் நமக்கு வராது. எனவே, நோட்டிபிகேஷன்கள் தேவையில்லை என்று நினைக்கும் செயலிகளை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை பரிசீலனை செய்து 'Opt Out' செய்வது நல்லது.