இனி வரும் விதிகளின்படி, திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (Intermediary Guidelines and Digital Media Ethics Code) விதிகளின் கீழ், செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் தெளிவாகவும், கண்ணில் படும்படியும் லேபள் செய்யப்படுவதை (Labelled) சமூக ஊடகத் தளங்கள் உறுதி செய்ய வேண்டும். அதாவது ஏஐ உருவாக்கம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அதேபோல், பயனர்கள் தாங்கள் பதிவேற்றும் உள்ளடக்கம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றப்பட்டதா என்பதை அறிவிக்க வேண்டியதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இத்தனை மணி நேரத்துக்குள் நீக்க வேண்டியது கட்டாயம்
அதேபோல டிஜிட்டல் தளங்களில் இருந்து ஆட்சேபனைக்குரிய செய்திகளை / புகைப்படங்களை அகற்றுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு தற்போது கடுமையாக்கி உள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒருவரின் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட பாலியல் தொடர்பான சித்தரிப்புகள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை, சம்பந்தப்பட்ட சமூக ஊடகம் 2 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். முன்னதாக இதற்கான காலக்கெடு 24 மணி நேரமாக இருந்தது.
அதேபோல, வேறு ஏதேனும் சட்டவிரோத உள்ளடக்கங்கள் இருப்பதாக பயனர் புகார் அளித்தாலோ அல்லது அரசு மற்றும் நீதிமன்றம் உத்தரவிட்டாலோ, அதை 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். முன்னதாக இதற்கான காலக்கெடு 36 மணி நேரமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
குறைதீர்ப்புக் காலமும் குறைப்பு
புதிய வழிகாட்டுதல்களின்படி, பொதுவான குறைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு 15 நாட்களில் இருந்து 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் பிற சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்குவதற்கான காலக்கெடு 72 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைச் செயல்படுத்தத் தவறினால், நாட்டின் தற்போதைய சமூக ஊடகச் சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
டீப் ஃபேக் குறித்து புகார் அளிப்பது எப்படி? – முழு வழிகாட்டல்
இந்தியாவில் டீப்ஃபேக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கு என்று தனிச்சட்டம் ஏதும் தற்போது இல்லை என்றாலும், முன்மொழியப்பட்ட 'டீப்ஃபேக் தடுப்பு மற்றும் குற்றவியல் மசோதா, 2023' இன்னும் சட்டமாக்கப்படவில்லை. இருப்பினும், டீப்ஃபேக் தொடர்பான உள்ளடக்கத்தைப் பற்றிப் புகாரளிக்க, குடிமக்கள் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உள்ள தேசிய சைபர் கிரைம் போர்ட்டலை அணுகலாம்.
புகார் அளிப்பது எப்படி?
- புகார் அளிப்பதற்கு முன், ஸ்கிரீன்ஷாட்கள், இணையதள முகவரிகள் மற்றும் தொடர்புடைய செய்திகள் போன்ற அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- போர்ட்டலில் Report Other Cyber Crime என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பெயர் மற்றும் மொபைல்எண்ணைக் கொடுத்து பதிவு செய்யவும்.
- சரிபார்ப்புக்காக உங்கள்எண்ணிற்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும்.
- தேவையான விவரங்களை நிரப்பவும்.
- நீங்கள் சேகரித்து வைத்துள்ள ஆதாரங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
- படிவத்தைச் சமர்ப்பித்து, உங்களுக்கான புகார் குறிப்பு எண்ணைப் (Complaint Reference Number) பெற்றுக்கொள்ளவும்.
புகார்தாரர்கள் உடனடி உதவிக்கு தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணான 1930-ஐயும் அழைக்கலாம். இருப்பினும், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் புகார் அளிக்க வேண்டும். இதுதவிர, சமூக ஊடகங்களிலேயே இருக்கும் ரிப்போர்ட் வசதி மூலமாகவும் டீப்ஃபேக் பதிவுகளைப் புகாரளிக்க முடியும்.