இந்தியாவிலேயே முதன்முறையாக 5ஜி அலைக்கற்றை சேவையை தாங்கள் பரிசோதித்துள்ளதாகக் கூறியுள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம்.


இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோக்கியாவுடன் இணைந்து 700 MHz அலைவரிசையில் 5ஜி சேவையை சோதித்துப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளது.


5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக ஏர்டெல் நிறுவனத்துக்கு மத்திய தொலைதொடர்பு நிறுவனம் பல்வேறு அலைவரிசையிலும் 5ஜியை சோதித்துப் பார்க்க அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் இதற்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மும்பை, ஹைதராபாத், குர்கான் பகுதிகளில் சோதனை நடந்தது. தற்போது கிழக்குப் பகுதியில் முதன்முதலாக நடந்துள்ளது.


இந்த சோதனையின் போது 40 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில், வயர்லெஸ் பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவையை தடையின்றி அதுவும் உயர் வேகத்தில் பெற முடிந்ததாக ஏர்டெல் கூறியுள்ளது. இதற்காக நோக்கியாவின் ஏர்ஸ்கேல் ரேடியோஸ், ஸ்டாண்ட் அலோன் கோர் ஆகியனவற்றைப் பயன்ப்டுத்தியுள்ளது ஏர்டெல். ஏர்டெல், இந்தியாவில் 5ஜி சேவையில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 


5ஜி வந்தால் என்ன பயன்?


5G என்றால் பெயரளவில் விவரிக்க வேண்டும் என்றால், 5வது தலைமுறை தலைமுறை மொபைல் இணைய சேவை. நாம் இப்போது 4ஜி மொபைல்களையே பயன்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறைக்கு அப்கிரேட் ஆகும்போது தற்போது இருக்கும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை (upload & download speed) விட கூடுதல் வேகத்தில் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.


ரேடியோ அலைவரிசையை பெரிய அளவில் பயன்படுத்துவதால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களை மொபைல் இணையத்தில் இணைத்துப் பயன்படுத்த முடியும்.




நாம் நேரடியாக காணும் பொருள்களுக்கு வரைபடம், ஒலி உள்ளிட்டவற்றை முப்பரிணாமத்தில், (ரியல் டைமில்) நிகழும் நேரத்திலேயே இணைத்துக் காட்டும் Augmented Reality, கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை நேரில் இருக்கும் உண்மையான உருவம் போலவே காட்டும் மெய்நிகர் உண்மை (Virtual reality) போன்றவற்றை இணையவாசிகள் எளிதில் அனுபவிக்கலாம்.


பேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த டார்கெட் கூட Virtual reality தான். அத்ற்காகத் தான் தனது நிறுவனத்தை மெட்டா எனப் பெயர் மாற்றி பில்லியன் கணக்கில் செலவு செய்து பல்வேறு புதுமைகளையும் செய்து வருகிறது. அடுத்தாண்டு இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இருக்கும். அப்போது அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் போட்டா போட்டி போட்டு ஏலம் எடுக்கும். அதற்காகத் தான் இப்போது எல்லா நிறுவனங்களும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன என்பது வேறு கதை.