கப்பார்.. இது தான் ஷிகர் தவானின் செல்லப் பெயர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் பஞ்சாப் அணியில் இந்த ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ளார்.


அண்மையில் இவர் பஞ்சாப் அணியில் யூடியூப் சேனலுக்கு அளித்த மனம் திறந்த பேட்டி ஒன்றில், "நான் அப்போது ஆரம்ப கால பயிற்சியில் இருந்தேன். பெரிதாக கிரிக்கெட்டில் பெயர் பெற்றிருக்கவில்லை. ஒரு பெண்ணிடம் அப்போது எனது காதலைச் சொன்னேன். அவரும் ஒரு வீராங்கனை. ஆடுகளப் பயிற்சியால் அவர் தோல் கருத்துப் போயிருந்தது. அவரிடம் காதலைச் சொன்னபோது அவர் அதை நிராகரித்துவிட்டார். அப்போது நான் அவரிடம் நீங்கள் ஒரு கோகினூர் வைரத்தை நிராகரித்துவிட்டீர்கள் என்று கூறினேன்" என்றார்.


ஷிகாரின் இந்த பதில் அவரது ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்தப் பேட்டியின் கீழ் பலரும் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஷிகர் தவான், ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.


தவானின் கிரிக்கெட் பயணம்..


தவான் கடந்த 2010இல் சர்வதேச கிரிக்கெட் மூலம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2013இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான தவான் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 187 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் மேல் ஈர்த்தார். அது இந்திய அணியில் அவருக்கென தவிர்க்க முடியாத இடத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பான இடத்தைப் பிடித்தார் தவான்.


2013 ஆம் ஆண்டு சாம்பியான்ஸ் டிராஃபி மூலம் தன்னை பெரிய ஆட்டக்காரர் என தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து 2015 உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 


கடந்த 2016 சீசனிலிருந்து ஐபிஎல் தொடரில் 479 ரன்களுக்கு மேல் அவர் குவித்து வருகிறார். கடந்த 2020 சீசனில் 618 ரன்களை அவர் விளாசி இருந்தார்.  தவான் 2014 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை முதல் 10 போட்டிகளுக்கு வழி நடத்தி இருந்தார். அதில் தனது அணியை நான்கு முறை வெற்றி பெற செய்திருந்தார். 2022 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் ஃபார்மில் ஆடி வருகிறார்.


வருகிற 8ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை பிரபோர்ன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.