டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான ஒன்றான விம்பிள்டன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் அரையிறுதி சுற்று போட்டி இன்று நடைபெற்றது. காயம் காரணமாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த ரஃபேல் நடால் விலகினார். இதனால் முதல் அரையிறுதிப் போட்டியில் கிரியோஸ் வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டார். 


 


இந்நிலையில் இன்று நோவக் ஜோகோவிச் மற்றும் கேமரூன் நோரி இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதல் செட்டில் நோரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இதைத் தொடர்ந்து நோவக் ஜோகோவிச் சுதாரித்து கொண்டு ஆடினார்.


 




ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் மூன்றாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றார். 4வது செட்டை வென்றால் ஜோகோவிச் போட்டியை வென்றுவிடுவார் என்பதால் விறுவிறுப்பாக அந்தச் செட் அமைந்தது. அதில் நோரி சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் ஜோகோவிச் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-4 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 2-6,6-3,6-2,6-4 என்ற கணக்கில் போட்டியை வென்றார். மேலும் 8வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்று அசத்தினார். 


 


இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் அதிக முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற சாதனையையும் ஜோகோவிச் படைத்தார். இவர் தற்போது வரை 32 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரோஜர் ஃபெடரர் 31 முறையும், ரஃபேல் நடால் 30 முறையும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். 6 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச் இம்முறை கோப்பையை வெல்லும் பட்சத்தில் 7 முறை கோப்பை வென்ற பீட் சாம்ப்ரஸ் ரெக்கார்டை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண