உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. இவர் தனது மூன்றரை வயதிலிருந்து தாயாரிடம் யோகா பயின்று வருகிறார். அவரது தாயாரும் யோகா பயிற்றுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முறையாக யோகா பயின்ற ப்ராண்வி குப்தா 200 மணி நேரம் பயிற்சி வழங்கிவிட்டமையால் அவருக்கு யோகா அலையன்ஸ் அமைப்பு சார்பில் பயிற்றுநர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து ப்ராண்வி கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பிற்கு அளித்தப் பேட்டியில், எனது பள்ளிப் படிப்பிற்கு இடையே இந்தப் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. எனக்கு எனது ஆசிரியர்களும், பெற்றோரும் மிகுந்த பக்கபலமாக இருந்தனர். நான் யோகா பயிற்றுநருக்கான தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதில் பெரு மகிழ்ச்சிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


ப்ராண்வி குப்தாவின் ஆசிரியை டாக்டர் சீமா காமத் கூறுகையில், ப்ராண்வி வகுப்பிலேயே நன்றாகப் படிக்கும் மாணவி. பல் திறன் கொண்டவர். அவருடைய வயதில் இத்தனை திறமையும், சுறுசுறுப்பும் கொண்ட சிறுமியை நான் என் பணிக் காலத்தில் இதுவரை பார்த்ததில்லை. எப்போதும் உற்சாகமாகவும் எதையும் கற்றுக் கொள்ளும் திறந்த மனதுடனும் இருப்பார் என்றார். 


ப்ராண்வி இந்தியாவில் பிறந்திருந்தாலும் இப்போது அவரும், அவரது குடும்பத்தாரும் துபாயில் வசிக்கின்றனர்.


யோகா என்பது கடினமான ஆசனங்களை செய்வதோ தியானம் செய்வதோ மட்டுமல்ல. நல்ல பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி யோகாவை சரியாக செய்யும் பட்சத்தில் நம் உடலில் அது பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. தியானிப்பது, மந்திரங்கள் ஓதுவது, பிரார்த்தனை மேற்கொள்வது, மூச்சு பயிற்சி செய்வது, தன்னலமற்ற செயல் செய்வது உள்பட சுய ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகள் அடங்கியதே யோகாவாகும். 


யுஜ் என்ற வார்த்தையிலிருந்தே யோகா என்ற வார்த்தை மறுவி வந்துள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பது என்ற பொருள் உண்டு. இதற்கு பல அர்த்தங்கள் தரப்படுகின்றன. ஆனால், அனைத்தையும் தொடர்புப்படுத்துவது ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையே ஆகும். ஆசனங்கள், உடற் பயிற்சி ஆகியவற்றை மேற்கோள் காட்டுவதற்கே யோகாசனம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.


யோகாசனங்களை பயிற்சி செய்வதன் முக்கிய பலனே உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்து கொள்வதாகும். கால போக்கில், உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது என அமெரிக்க சுகாதார அமைப்பு கூறுகிறது.


நெகிழ்வுத்தன்மை என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும், அதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவை அனைத்தும் அதிக அளவில் இருந்து மிதமானவை முதல் லேசானவை வரை அதன் தீவிரத்தில் வேறுபடுகின்றன. குறைந்த தீவிரத்தன்மை கொண்ட ஆசனங்கள் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கலாம்.


யோகா செய்வதன் மூலம் 65 மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்கள்  உடலில் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது. இந்த வயதில் இருப்பவர்களுக்கு, கால போக்கில், நெகிழ்வுத்தன்மை குறைவதால் பாதிப்படைகின்றனர். யோகா செய்வதன் மூலம் இந்த குறைபாடு குறைகிறது. 


நீண்ட காலமாக மன அழுத்த பிரச்னையால் பாதிப்படைந்தவர்கள், யோகா செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபடுகிறார்கள். அதில், 84 சதவிகித வயதான அமெரிக்கர்கள் நேர்மறையான முடிவுகளை பெற்றுள்ளனர் என அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.