ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது.  டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் அணி வீரர்களின் விவரத்தை மற்ற அணிகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்திய அணியில் இடம் பெறபோகும் வீரர்கள் யார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். 


டி-20 உலகக்கோப்பைக்கு கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ள இந்திய அணி விவரம்:


விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார்
ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, யுவேந்திர சாஹல்,ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்


ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவானை குறிப்பிடாத கவாஸ்கர், ரோஹித்தும் கோலியும் ஓப்பனிங் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் சுனில் கவாஸ்கரின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



க்ரூப்: 2ல் இந்திய அணி


சூப்பர் 12 க்ரூப்:2ல் இடம் பெற்றிருக்கும் இந்திய அணியுடன், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இது தவிர, முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முதல் சுற்றில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். 


இந்நிலையில், க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், பி1 மற்றும் ஏ2 என குறிப்பிடப்பட்டுள்ள அணிகள் இன்னும் முடிவாகவில்லை. முதல் சுற்றுப்போட்டிகளின் முடிவில் சூப்பர் 12 பிரிவுக்கு தேர்வாகும் அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கும். 






சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபுதாபியில் நடக்க இருக்கும் முதல் அரை இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதியும், இரண்டாவது அரை இறுதிப்போட்டி துபாயில், நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.