டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் மகளிர் 60 கிலோ எடை ப் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் பங்கேற்கிறார். அவருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டது. இதனால் நேரடியாக இரண்டாவது சுற்றில் இன்று அவர் பங்கேற்றார். இரண்டாவது சுற்றில் அவர் தாய்லாந்து வீராங்கனை சீசோண்டே சுடோபார்ன் என்பவரை எதிர்கொண்டார். 


இந்தப் போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய தாய்லாந்து வீராங்கனை சிறப்பாக விளையாடினார்.  இரண்டாவது ரவுண்டில் தொடக்கம் முதலே இந்திய வீராங்கனை கவுர் சிறப்பாக சண்டை செய்தார்.  எனினும் சுதாரித்து கொண்ட தாய்லாந்து வீராங்கனை சிறப்பாக மீண்டு வந்தார்.இறுதியில் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர் தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அத்துடன் காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தார். 


 






முன்னதாக  நேற்று நடைபெற்ற ஆடவர் 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். அவர் இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் சிறப்பாக சதீஷ் குமார் சண்டை செய்தார். அதேபோல் இரண்டாவது ரவுண்டிலும் அவர் சிறப்பாக ஜமைக்க வீரரின் முயற்சிகளை தடுத்தார். முதல் இரண்டு ரவுண்ட் சதீஷ் குமாருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் மூன்றாவது ரவுண்டில் ஜமைக்கா வீரர் இந்திய வீரரை நாக் அவுட் செய்ய முயன்றார். அதை சதீஷ் குமார் சிறப்பாக எதிர்கொன்டார். இறுதியில் 4-1  என்ற கணக்கில் சதீஷ் குமார் வென்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றில் பூஜா ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பூஜா ராணி அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இசார்க்கை எதிர்த்து சண்டை செய்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜிரியா வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் இரண்டாவது சுற்றில் கொலம்பியா வீராங்கனை வெலன்சியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மேலும் ஆடவர் பிரிவில் மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ)ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 


மேலும் படிக்க: ஒலிம்பிக் மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தல் !