Neeraj Chopra Lausanne League: டைமெண்ட் லீக் தொடரில் அசத்திய நீரஜ் சோப்ரா.. பட்டம் வென்ற முதல் இந்தியர்.. இறுதிக்கு தகுதி..!

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பட்டம் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Continues below advertisement

உலக தடகள களத்தில் இந்தியாவை தொடர்ந்து பெருமைப்படுத்தி வருபவர்களில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் ஒருவர். இவர் நேற்று சுவிட்சர்லாந்தின் லவுசானேவில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தடகள தொடரில் பங்கேற்றார். இதற்கு முன்பாக நீரஜ் சோப்ரா இந்தாண்டு யூஜீனில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடரில் பங்கேற்று இருந்தார். அந்தத் தொடரில் இவர் இரண்டாம் இடம்பிடித்தார். 

Continues below advertisement

இந்நிலையில் லவுசானே தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு ஜெர்மனியின் ஸூரிச் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று  ஈட்டி எறிதலில் தன்னுடைய முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் இவர் 85.18 மீட்டர் வீசினார். மூன்றாவது வாய்ப்பில் இவர் ஃபவுல் செய்தார். நான்காவது வாய்ப்பில் 80.04 மீட்டர் தூரம் வீசினார். 

 

இறுதியில் தன்னுடைய முதல் வாய்ப்பில் வீசிய 89.08 மீட்டர் தூரத்துடன் இவர் முதலிடம் பிடித்தார். அத்துடன் லவுசானே டைமெண்ட் லீக் தொடரின் பட்டத்தையும் வென்றார். இதன்மூலம் டைமெண்ட் லீக் தொடரின் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஸூரிச் நகரில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ள டைமெண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

இதற்கு முன்பாக டைமெண்ட் லீக் தொடரில் இந்தியாவின் வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். இவர் 2012 நியூயார்க் மற்றும் 2014 தோஹா ஆகிய இரண்டிலும் வட்டு எறிதலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஷாங்காய் மற்றும் யூஜீன் நகரில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடர்களில் கவுடா மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வந்த நீரஜ் சோப்ரா தற்போது முதல் தொடரில் அசத்தியுள்ளார். இந்தப் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை  சந்தித்த நீரஜ் சோப்ரா, ”இன்னும் என்னுடைய காயம் சரியாக குணமடையவில்லை. அதனால் நான் சற்று கவனமாக இன்றைய போட்டியில் பங்கேற்று இருந்தேன். அதனால் நான் அதிகமாக தூரம் வீச வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola