மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 3 மீட்டர் விதியும் பேசுபொருளாகியுள்ளது.


ரோகித் அவுட்:


பரபரப்பான நிலையை எட்டியுள்ள ஐபிலெல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஒரே அடியாக 8வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தாவியுள்ளது. இதனிடையே, இந்த போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்து இருந்தபோது, க்ரீஸை விட்டு இறங்கி வந்து அடிக்க முயன்றபோது ஹசரங்கா பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டிஆர் எஸ் முறையில் ரிவ்யூ செய்தபோது ரோகித் அவுட் ஆனதாகவே தெரிவிக்கப்பட்டது. இது தான் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையாகி உள்ளது.


3 மீட்டர் விதி:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் விதிகளின்படி, க்ரீஸை விட்டு இறங்கி வந்து ஒருவர் விளையாடும் போது வீரருக்கும், ஸ்டம்பிற்கும் இடையேயான தூரம் 3 மீட்டர் அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால், பந்து இம்பேக்ட் லைனில் குத்தியிருந்தாலும் கூட, அவுட் வழங்கக் கூடாது. இது எல்பிடபள்யூ விக்கெட்டில் 3 மீட்டர் விதி என பின்பற்றப்படுகிறது. அதேநேரம், இந்த விவகாரத்தில் மைதானத்தில் உள்ள நடுவரின் முடிவே இறுதியானது. ஆனால், மைதானத்தில் இருந்த நடுவர் நாட்-அவுட் கொடுத்த பிறகும், 3வது நடுவர் ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ரோகித் சர்மா நிலை என்ன?


நேற்றைய போட்டியில் ஹசரங்கா பந்துவீச்சை அடிக்க ரோகித் சர்மா,  க்ரீஸை விட்டு இறங்கி வந்தபோது அவருக்கும், ஸ்டம்பிற்கும் இடையேயான தூரம் 3 மீட்டருக்கும் அதிகமாக தான் இருந்தது. அப்படி இருந்தும், டிஆர்எஸ் முறையின்போது இம்பேக்ட் லைனில் பந்து குத்தியதால், ரோகித் அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தார். இதனால், சர்வதே கிரிக்கெட் சம்மேளனத்தின் விதிகளையும் மீறி, ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.


சொதப்பும் ரோகித் சர்மா:


நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் விளாசியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் எடுத்த நிலையில், அதற்கு முந்தைய இரண்டு போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக்-அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும், ஒற்றை இலக்கில் ரோகித் சர்மா ஆட்டமிழந்துள்ளார். இதன் மூலம் ஒரு அணி 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை துரத்தும் போது அதிகமுறை ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.