சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இணைந்தது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நிலையில், அந்தப் பயணம் கசப்பான அனுபவமாக முடிந்ததாக அஸ்வின் உருக்கமாகப் பேசியுள்ளார்.

Continues below advertisement

மன அழுத்தமும், ஏமாற்றமும்:

"CSK-வில் நான் கழித்த அந்த சீசன் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. களத்தில் என்னால் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று என் மனது சொல்கிறது. ஆனால், குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டு, இந்த மன அழுத்தத்தைச் சுமக்க எனக்குத் திராணி இல்லை. அதனால் நானே விலகிக்கொண்டேன்" என்று அஸ்வின் தெரிவித்தார்.

மேலும், "அந்தக் காயங்களை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை. அது எனக்கு மனதளவில் பெரும் வேதனையை அளித்தது. கிரிக்கெட் பயணத்தை சென்னையில் தொடங்கினேன், இப்போது என் சொந்த ஊரான சிஎஸ்கே அணியோடு அதை நிறைவு செய்வது எனக்கு திருப்தி அளிக்கிறது" என்றார்.

Continues below advertisement

2025-இல் நடந்தது என்ன?

2025 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் இருந்த நிலையில், அஸ்வினுக்கு வெறும் 9 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அணியில் தனது பங்கு என்ன என்பது குறித்து அவர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே, 2026 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருவது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு

அஸ்வினின் விலகல் குறித்த சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்: "நான் ஓய்வு பெற எடுத்த முடிவு, அணியின் சுமையைக் குறைத்தது. என்னை தக்கவைப்பதா அல்லது விடுவிப்பதா என்ற குழப்பத்திலிருந்து அவர்களை விடுவித்தேன். நான் விலகியதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 10 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது" என்றார்.

9.75 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஸ்வின், தனது விலகல் மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளார். எம்.எஸ். தோனியின் நிழலில் பயணிக்கும் சிஎஸ்கே அணிக்கு, அஸ்வினின் இந்த விலகல் புதிய வீரர்களைத் திரட்டப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.