IPL Final: ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி இடமாற்றம்.. அதிருப்தியில் கர்நாடக கிரிக்கெட் சங்கம்
ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதால், வழக்கப்படி இந்த ஆண்டு இறுதிப்போட்டி பெங்களூருவிலேயே நடந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கான சரியான காரணத்தை விளக்காமல் பிசிசிஐ போட்டியை அகமதாபாத்திற்கு மாற்றியுள்ளது.
பெங்களூருவில் நடைபெறவிருந்த 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியை அகமதாபாத்திற்கு மாற்றி பிசிசிஐ எடுத்த முடிவிற்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமதனது ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதால், வழக்கப்படி இந்த ஆண்டு இறுதிப்போட்டி பெங்களூருவிலேயே நடந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கான சரியான காரணத்தை விளக்காமல் பிசிசிஐ போட்டியை அகமதாபாத்திற்கு மாற்றியுள்ளது.
பிசிசிஐ-யின் விளக்கம்
உள்ளூர் சங்கம் மற்றும் அதிகாரிகளின் சில கோரிக்கைகள் பிசிசிஐ-யின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஐபிஎல் தொடக்கத்தின் போது, பெங்களூருவில் ஐந்து லீக் போட்டிகள், ஒரு பிளே-ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் ஏழு போட்டிகள் நடத்தப்படும் என்று கேஎஸ்சிஏ தலைவர் வெங்கடேஷ் பிரசாத் அறிவித்திருந்தார். தற்போது பிளே-ஆஃப் போட்டிகள் மற்ற மைதானங்களுக்கு மாற்றப்பட்டது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கேஎஸ்சிஏ செய்தித் தொடர்பாளர் வினய் மிருத்யுஞ்சயா கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மைதான நிர்வாகம்
சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தாங்கள் தயாராக இருப்பதை பிசிசிஐ-யிடம் முறையாகத் தெரிவித்திருந்தும், மாற்றத்திற்கான குறிப்பிட்ட காரணங்கள் இன்னும் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ-யின் முடிவை மதிப்பதாகத் தெரிவித்த மிருத்யுஞ்சயா, அதே சமயம் பெங்களூருவில் ஏற்கனவே நடந்த போட்டிகள் எவ்விதப் புகாருமின்றி மிகச்சிறப்பாக நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு வசதிகள் மற்றும் மைதான சீரமைப்புப் பணிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. மாநில அரசும் பிசிசிஐ-யும் இந்த முன்னேற்பாடுகளில் திருப்தி அடைந்த பின்னரே போட்டிகளை நடத்த அனுமதி அளித்தன. தற்போதைய தொடரில் பெங்களூருவில் நடந்த ஐந்து போட்டிகளும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிகச்சிறந்த கூட்ட மேலாண்மையுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.
சர்வதேச போட்டிகளுக்கான தயார் நிலை
ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகள் பெங்களூருக்கு வழங்கப்படவில்லை என்றாலும், சர்வதேச போட்டிகளை நடத்த கேஎஸ்சிஏ முழுத் தயார் நிலையில் உள்ளதாக மிருத்யுஞ்சயா உறுதி அளித்துள்ளார். அதன்படி வரும் அக்டோபர் 17-ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியும், டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்




















