Praful Hinge: 19 வருடத்தில் முதன்முறை! ராஜஸ்தானை அலறவிட்ட பிரபுல் ஹிஞ்சே - யார் இந்த சன்ரைசர்ஸ் ஸ்டார்?
ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று 4 விக்கெட்டை வீழ்த்திய சன்ரைசர்ஸ் வீரர் பிரபுல் ஹிஞ்சே புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதியது. இந்த தொடரைப் பொறுத்தமட்டில் ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் அணி வெற்றி தோல்வி என்றே ஆடி வருகிறது.
217 ரன்கள் இலக்கு:
இதனால், இந்த போட்டி தொடங்கும் முன்பு அனைவரும் ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்றே கருதினர். ஏனென்றால், இந்த தொடர் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் ஆர்சிபி அணியையே ராஜஸ்தான் அணி எளிதாக வென்றதாலும், சூர்யவன்ஷியின் அபாரமான பேட்டிங்காலும் ரசிகர்கள் பலரும் அவ்வாறு கருதினர்.
ஆனால், நேற்றைய ஆட்டத்தின் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்றாகவே அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் பிராஃபுல் ஹிஞ்ச். மொத்த ராஜஸ்தான் டாப் ஆர்டரையும் சிதைத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் அணிக்கு சன்ரைசர்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தபோது, அதை எளிதாக ராஜஸ்தான் எட்டிவிடும் என்றே பலரும் கருதினர்.
முதல் ஓவரிலே ஆட்டத்தை முடித்த பிரபுல்:
ஆனால், ஆட்டத்தை முதல் ஓவரிலே பிரபுல் ஹிஞ்ச் சன்ரைசர்ஸ் வசம் கொண்டு வந்துவிட்டார். முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிய பிரபுல் ஹிஞ்சே முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்திலே அபாயகரமான சூர்யவன்ஷி அடித்து ஆட முயற்சித்து இஷான் கிஷனிடம் அவுட்டானார்.
4 விக்கெட்:
அடுத்து அபாயகரமான துருவ் ஜுரலை அதே ஓவரின் நான்காவது பந்தில் போல்டாக்கினார். பின்னர், அதே ஓவரின் கடைசி பந்தில் ப்ரெட்டோரியசையும் அவுட்டாக்க அந்த ஓவரில் 1 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்ததுடன் அங்கேயே ஆட்டத்தையும் ராஜஸ்தான் பறிகொடுத்தது. அடுத்து தான் வீசிய அடுத்த ஓவரில் ராஜஸ்தான் கேப்டன் ரியன் பராக்கை 4 ரன்னில் அவுட்டாக்கினார்.
19 வருடத்தில் முதன்முறை:
9 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி கடைசியில் 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்ததில் பிரபுல் ஹிஞ்சே பங்கு மிக முக்கியமானது. 19 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரிலே 3 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவரே ஆவார்.
30 லட்சம் ரூபாய்:
சூர்யவன்ஷி, துருவ் ஜுரல், ப்ரெட்டோரியஸ், ரியான் பராக் என 4 பேரை அவுட்டாக்கிய அவர் 4 ஓவர்களில் 34 ரன்கள் விட்டு்க்கொடுத்து அபாரமாக பந்துவீசினார். இவர் விதர்பாவைச் சேர்ந்தவர். 24 வயதே ஆன இவர் உமேஷ் யாதவ் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோரால் உத்வேகம் பெற்றவர். நேற்றைய போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் மொத்த ராஜஸ்தான் டாப் ஆர்டரையும் சிதைத்து சன்ரைசர்ஸ்க்கு அபார வெற்றியைப் பெற்றுத் தந்து பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். இவரை சன்ரைசர்ஸ் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
இவர் மட்டுமின்றி நேற்று அறிமுகமான மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஷகிப் ஹுசைன் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சன்ரைசர்ஸின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















