Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிற்கு குட் பை சொல்லப்போகும் மும்பை இந்தியன்ஸ்?
தொடர் தோல்வி காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவை நீக்கிவிடுவதற்கு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல முறை வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர் ஹர்திக் பாண்ட்யா. பின்னர் குஜராத் அணிக்காக ஆடினார். அங்கு சென்ற முதல் சீசனிலே கோப்பையைப் பெற்றுக்கொடுத்தவர் பின்னர் மீண்டும் மும்பை அணிக்காக திரும்பினார்.
ஹர்திக் பாண்ட்யா தலைமையில் சொதப்பும் மும்பை:
மும்பை அணிக்கு திரும்பி வந்ததும் கேப்டனாக தனது ஆட்டத்தை தொடங்கிய ஹர்திக் பாண்ட்யாவிற்கு சறுக்கல் மேல் சறுக்கல் இருந்தது. 2024ம் ஆண்டு மும்பைக்கு கேப்டனாக திரும்பிய ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 3 சீசன்களிலும் மிக மோசமாக ஆடி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த சீசனிலும் தொடரை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ள நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியும், அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சும் மும்பை நிர்வாகத்திற்கு பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 போட்டிகளில் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.
கழட்டிவிடப்போகிறார்களா?
ஹர்திக் பாண்ட்யாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதாலும் அதன் காரணமாகவே அவர் அணியில் ஆடவில்லை என்று அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறினாலும் அணி நிர்வாகம் அவரை விடுவிக்கத் தயாராகி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். இது இந்த தகவலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையில் 2024 களமிறங்கிய மும்பை அணி 10வது இடத்திற்கு சென்றது. கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் சென்று 4வது இடத்தில் தோற்றது. இந்த சீசனில் முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது. குறிப்பாக, சென்னை அணிக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் 208 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி உறுதியானபோது அந்த அணியின் உரிமையாளர் ஆனந்த் அம்பானி அதிருப்தியில் ரசிகர்களிடம் கையை காட்டி புறப்படுங்கள் என்று சைகை செய்து விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எந்த அணிக்கு போவார்?
இந்த சூழலில், ஹர்திக் பாண்ட்யாவின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள அணி நிர்வாகம் தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாவதும், நடக்கும் நிகழ்வுகளும் அதை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது. ஹர்திக் பாண்ட்யா அப்படி வெளியேறினால் எந்த அணிக்காக ஆடுவார்? அவ்வாறு சென்றால் அவர் கேப்டனாக களமிறங்குவாரா? அல்லது வீரராக தொடர்வாரா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிகழ்வுகளால் இந்திய அணியில் அவரது ஆட்டத்திறன் பாதிக்குமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யா 160 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 895 ரன்கள் எடுத்துள்ளார். 91 ரன்களை அதிகபட்சமாக விளாசியுள்ளார். 10 அரைசதங்கள் விளாசியுள்ளார். 44 முறை அவுட்டாகாமல் ஆடியுள்ளார். அதேபோல பந்துவீச்சில் 82 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Before You Go
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ட்ரெண்டிங் செய்திகள்



















