CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
CSK Vs PBKS IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டுள்ளது.

CSK Vs PBKS IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.
பஞ்சாப் அபார வெற்றி:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக பேட்டிங் செய்து 209 ரன்களை குவித்தது. இதனால், நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை உள்ளூர் ரசிகர்கள் முன்பாக பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பஞ்சாப் அணி சென்னையின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ஸ்ரேயாஸ் அய்யர், ப்ரப்சிம்ரன் சிங், ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி பஞ்சாப் நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. அதேநேரம், சென்னை அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் நீடிக்கிறது. அதோடு, இந்த போட்டியில் சென்னை அணி சில மோசமான சாதனைகளையும் படைத்துள்ளது.
சேப்பாக்கத்தில் தொடரும் தோல்வி - பஞ்சாப் ஆதிக்கம்
- சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக களமிறங்கிய கடைசி நான்கு போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது
- ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 200+ என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையை பஞ்சாப் பெற்றுள்ளது - 9 முறை
- ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் விளாசிய அணி என்ற சாதனையை 3.2 ஓவர்களில் பஞ்சாப் அணி எட்டியுள்ளது
- இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 33 போட்டிகளில் பஞ்சாப் அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணிகளில் மும்பைக்கு அடுத்த இடத்தை பஞ்சாப் பிடித்துள்ளது.
- சென்னை அணிக்கு எதிராக அதிக முறை 200+ ரன்களை விளாசிய அணி என்ற பெருமையை பெங்களூருவுடன் பஞ்சாபும் தற்போது பகிர்ந்துகொள்கிறது - 6 முறை
- சொந்த மைதானம், சென்னையின் கோட்டை என வர்ணிக்கப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியுற்றுள்ளது
சென்னை அணியின் பிரச்னை என்ன?
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ், “சுழற்பந்து வீச்சாளர்களால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டோம். முதல் போட்டியை காட்டிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதில் பல்வேறு விஷயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார். நடப்பு தொடரில் சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமாக பந்துவீச்சு இருக்கும் என கணிக்கப்பட்டது தற்போது உண்மையாகி வருகிறது.
காயத்தால் தடுமாறும் சென்னை
சென்னை அணியில் நடப்பாண்டிற்கான நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக நாதன் எல்லீஸ் இருப்பார் என கருதப்பட்டது. அவரை மையப்படுத்தியே டெத் ஓவர் திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தன. ஆனால், காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகினார். அவருக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட ஸ்பென்சர் ஜான்சனும் ஏப்ரல் மாதத்தின் மூன்றவாது வாரத்தில் தான் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பவுலிங் யூனிட்டில் சரியான கலவையை உருவாக்க முடியாமல் சென்னை தத்தளித்து வருகிறது. ஜடேஜா, பதிரனா போன்ற வீரர்களின் இடத்தை நிரப்ப, சென்னை அணி இன்னும் சரியான வீரர்களை அடையாளம் காணவில்லை என்பதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்




















