ஐபிஎல் நாளை தொடங்கவுள்ளதால், வீரர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் ஐபிஎல் திருவிழாவிற்கு தயாராகி வருகின்றனர். முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. 


பதிரானா:


இந்நிலையில் சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னை அணியின் மிகவும் முக்கியமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானா இந்த சீசனின் தொடக்க போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 






இந்த தகவல் சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான தொடரின்போது பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக பதிரானா குணமடையாததால், ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் வங்கதேச அணியின் முஸ்தபிகுர் ரஹ்மான் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், பத்திரானாவும் இல்லாதது சென்னை அணியின் பந்துவீச்சுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.