வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு டிரேடிங் செய்ய டெல்லி கேபிட்டல் அணி முடிவு செய்தது. டிரேடிங் திங்கள்கிழமை முடிவடைந்தது. 


ஷர்துல் தாக்குரை சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வாங்க விருப்பம் தெரிவித்தன. ஆனால், டெல்லி அணி நிர்வாகம் அவர்கள் கேட்ட விலைக்கு டீலை ஒப்புக் கொள்ளவில்லை.


இதையடுத்து, கொல்கத்தா கேட்ட விலைக்கு டெல்லி உடன்பட்டது. இதையடுத்து டீல் இறுதியானது.  
இதனால், 2023 ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவிற்காக ஷர்துல் தாக்குர் விளையாடவுள்ளார். மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்), ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் (தற்போது இல்லை), 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியிருக்கிறார்.


ஷர்துல் தாக்குருக்கு கொல்கத்தா அணி 6ஆவது அணியாகும். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஷர்துல் தாக்குரை சிஎஸ்கே விடுவித்தது. அதையடுத்து ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை வாங்கியது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஷர்துல் தாக்குர் 14 ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி 9.79 ஆக இருந்தது.138 ஸ்டிரைக் ரேட்டுடன் ஷர்துல், 120 ரன்களை விளாசினார்.


நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணிக்காகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்தனர்.


T20 WC 2022 Prize Money: உலகக் கோப்பையில் ஜெயித்த அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை தெரியுமா?


டிரேடிங் விண்டோவைப் பயன்படுத்தி கொல்கத்தா அணி வாங்கிய மூன்றாவது வீரர் ஷர்துல் தாக்குர். நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசன், ஆப்கன் விக்கெட்கீப்பர் ரகுமானுல்லா குர்பாஜ் ஆகிய இரு வீரர்களையும் கொல்கத்தா வாங்கியுள்ளது. இந்த இரண்டு வீரர்களையும் டிரேடிங் விண்டோ மூலம் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து கொல்கத்தா அணி நிர்வாகம் வாங்கியது.


IPL 2023 Retention LIVE: கொல்கத்தாவிற்கு டிரேடிங் செய்யப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்


2018, 2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற அணியில் ஷர்துல் தாக்குர் இருந்தார் என்பதால் கொல்கத்தாவுக்கு இவர் ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை முன்னிட்டு, வரும் டிசம்பர் மாதம் 23ம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதைமுன்னிட்டு,  10 அணிகளின் நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைக்க உள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை, நவம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில் சென்னை மற்றும் மும்பை அணிகள், தாங்கள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ-யிடம் வழங்கி உள்ளது.