ஐ.பி.எல். தொடரின் 17-வது ஆட்டம் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் இன்னிங்சை டி காக்கும், ரோகித் சர்மாவும் தொடங்கினர்.


இந்த தொடர் தொடங்கியது முதல் பார்மில் இல்லாமல் தவிக்கும் டி காக் இந்த போட்டியிலும் தடுமாறினர், இதனால், அவர் தீபக் ஹூடாவின் பந்துவீச்சில் ஹென்ரிக்சிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து பார்மில் இல்லாமல் தடுமாறும் மற்றொரு வீரரான இஷான் கிஷான் களமிறங்கினார்.




இஷான் கிஷான், இந்த போட்டியிலும் ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார். 17 பந்துகளை சந்தித்த இஷான்கிஷான் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்து ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரோகித் சர்மாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து நேர்த்தியான ஆட்டத்த வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களை குவித்திருந்த சூர்யகுமார் யாதவ் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 17.3 ஓவர்களில் 112 ஆக இருந்தது. அடுத்து வந்த வீரர்களில் பொல்லார்ட் மட்டும் 16 ரன்களை எடுத்தார். பிற வீரர்கள் ஒற்றை ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்ததினர். ஹென்ரிக்ஸ் மற்றும் தீபக் ஹூடா மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.




இதையடுத்து, 131 ரன் என்ற எளிமையான இலக்குடன் பஞ்சாப் அணி வீரர்கள் களமிறங்கினர். கே.எல்.ராகுலும். மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர். கடந்த போட்டிகளைப் போல அல்லாமல், மயங்க் அகர்வால் இந்த போட்டியில் துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். ஆனால், அவர் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அடுத்து அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் களமிறங்கினார். இருவரும் இணைந்து மும்பை பந்துவீச்சை எந்தவித சிரமும் இல்லாமல் எதிர்கொண்டனர். அவ்வப்போது ஏதுவான பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டனர். இறுதியில் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 132 ரன்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது.




பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 60 ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 பந்துகளில் 43 ரன்களை குவித்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி 4வது இடத்தில் உள்ளது.