FIFA World Cup: மிஸ் பண்ணிட்டீங்களே! 1950 உலகக்கோப்பை கால்பந்தை இந்தியா தவறவிட்டது எப்படி?
இந்திய கால்பந்து அணிக்கு 1950ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்தில் ஆட வாய்ப்பு கிடைத்தது எப்படி? அதை இந்தியா தவறவிட்டது எப்படி? என்பதை கீழே காணலாம்.

உலகத்திலே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்து உள்ளது. இந்த விளையாட்டின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து இன்று மெக்சிகோவில் தொடங்குகிறது. ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
காலுக்கு வந்த பொன்னான வாய்ப்பு:
125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவிற்கு உலகளவில் கால்பந்தில் இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பை கால்பந்தில் ஆடாத இந்தியாவிற்கு 1950ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆட வாய்ப்பு கிட்டியது. ஆனால், அந்த வாய்ப்பு நழுவியது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1950ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்தை பிரேசில் நாடு நடத்தியது. நடப்பு சாம்பியன் என்ற அடிப்படையில் இத்தாலியும், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரேசிலும் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், எஞ்சிய 14 அணிகளுக்கான வாய்ப்புகள் இருந்தது. இதில் 7 அணிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், 6 அணிகள் அமெரிக்க கண்டத்தில் இருந்தும் 1 அணி ஆசியாவில் இருந்தும் பங்கேற்க வேண்டும் என்றும் கால்பந்து சம்மேளனம் ஒதுக்கியது.
ஜாக்பாட்?
1950 காலகட்டத்தில் ஆசியாவிலே கால்பந்தில் மிக மிக பலமான அணியாக திகழ்ந்தது ஜப்பான். ஆனால், இரண்டாவது உலகப்போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலால் மொத்த ஜப்பானும் நிலைகுலைந்து இருந்தது. இதனால், அவர்கள் உலகக்கோப்பை கால்பந்தில் ஆடும் நிலைமையில் இல்லை.
ஜப்பான் தவறவிட்ட வாய்ப்பு பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பர்மா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு கிடைக்கும் சூழல் உருவானது. இதில் அப்போதைய பொருளாதார சூழல், போக்குவரத்து செலவு உள்ளிட்ட பலவற்றை கருதி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பர்மா நாடுகள் தங்களால் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க இயலாது என்று வெளிப்படையாக அறிவித்தது.
இதையடுத்து, எந்த தடங்கலும் இல்லாமலும் இந்தியாவிற்கு இந்த உலகக்கோப்பையில் ஆசியாவின் சார்பில் பிரதிநிதியாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. குரூப் 3-வில் ஸ்வீடன், இத்தாலி மற்றும் பராகுவே ஆகிய அணிகளுடன் இந்திய அணிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த உலகக்கோப்பையில் ஆடியிருந்தால் உலகளவில் இந்தியாவின் புகழ் பன்மடங்கு அப்போதே மிளிர்ந்திருக்கும்.
தவறியது எப்படி?
ஆனால், இந்திய கால்பந்து சம்மேளனம் சில காரணங்களுக்காக இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டது. தற்போது வரை அதற்கான துல்லியமான காரணம் தெரியவில்லை. ஆனால், பிரபலமான கால்பந்து விளையாட்டு எழுத்தாளர் மறைந்த நோவி கபாடியா, அப்போதைய கால்பந்து சம்மேளனத்திற்கு உலகக்கோப்பை கால்பந்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. தேசிய விளையாட்டு அமைப்பும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கே முக்கியத்துவம் அளித்தது. இதன் காரணமாக, உலகக்கோப்பை கால்பந்தில் ஆடும் வாய்ப்பை தவறவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் அந்த உலகக்கோப்பையில் ஆடத் தவறியதால் ஆசியாவில் இருந்து எந்த நாடும் அந்த உலகக்கோப்பையில் ஆடவில்லை. இந்திய அணி ஆடாமல் போனதற்கு போதியளவு கால அவகாசம் இன்மை, பயிற்சிக்கு போதிய நேரம் இன்மை போன்ற காரணங்களால்தான் அப்போதைய கால்பந்து சம்மேளனம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அப்போது மற்ற அணிகளுக்கும் அதே சூழல்தான் இருந்தது என்றும் கூறப்படுகிறது.
ஷு அணியாதது காரணமா?
இதுமட்டுமின்றி அப்போதைய இந்திய கால்பந்து அணி காலில் ஷு அணிய மறுத்த காரணத்தாலும் ஆடும் வாய்ப்பை இழந்ததாகவும் கூறப்படுகிறது. 1948ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள் வெறும் கால்களுடனே ஆடினார்கள். இதையடுத்து, பிஃபா வீரர்கள் வெறும் கால்களுடன் கால்பந்து ஆட தடை விதித்தது. ஆனால், அப்போதைய இந்திய கால்பந்து கேப்டன் சைலன் மன்னா ஷு அணிந்து ஆட தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்திய அணி 1950 உலகக்கோப்பையில் ஆடியிருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், 1951 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பலமிகுந்த ஜப்பானை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி 1-0 என்று தங்கம் வென்றிருந்தது. அன்று இந்தியாவிடம் தோற்ற ஜப்பான், ஈரான் இன்று உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆடி வருகின்றனர். அப்போதைய இந்திய கால்பந்து அணியை சையத் அப்துல் ரஹீம் என்ற ஹைதரபாத் பயிற்சியாளர் செதுக்கியிருந்தார்.
காத்திருப்போம்:
கேபி தன்ராஜ், சையத் கவாஜா அசீஸ் உத் தின், ஜிஎஸ் லைக், அப்துல் லத்தீஃப், நூர் முகமது என அப்போதைய இந்திய கால்பந்து வீரர்கள் அபாரமான திறமை கொண்டவர்கள். இந்திய கால்பந்து சம்மேளனம் மட்டும் இவர்களை அனுப்பியிருந்தால் கண்டிப்பாக அந்த உலகக்கோப்பை மூலமாக உலகளவில் இவர்கள் வெளிச்சம் பெற்றிருப்பார்கள்.
விரைவில் இந்திய அணியும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஒரு அணியாக கால்தடம் பதிக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.
ட்ரெண்டிங் செய்திகள்






















