உலகக்கோப்பை கனவு கைவிட்டுபோனதால் மைதானத்திலேயே ரொனால்டோ தேம்பி அழுதது கால்பந்து ரசிகர்கள் அனைவரையும் சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் களமிறங்கினாலும், பலமான அணிகள் வரிசையில் பல அணிகள் இருந்தாலும், கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்ட அணிகள் என்றால் அது ரொனால்டோவின் போர்ச்சுகல், நெய்மரின் பிரேசில், மெஸ்ஸியின் அர்ஜெண்டினா, எம்பாப்வேயின் நடப்புச்சாம்பியன் பிரான்ஸ் அணிகள்தான்.


கண்ணீர்விட்ட ரொனால்டோ:


இவற்றில் போர்ச்சுகலின் ரொனால்டோவுக்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் தான் அதிகம். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களில் அவரை இன்ஸ்டாவில் பின் தொடருபவர்கள் மட்டும் 512 மில்லியன். ஒட்டுமொத்த மைதானத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ரொனால்டோ கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி, தேம்பி அழுது கொண்டு இருக்கிறார், அவருக்கு ஆறுதல் சொல்ல யாருக்குமே தைரியம் இல்லை என்றே கூறவேண்டும். தனது நுட்பமான விளையாட்டால் கால்பந்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்த கால்பந்து நாயகன், கால்பந்து மைதானத்திலேயே கதறி, கதறி அழும் நிலை வரும் என யாருமே நினைத்து பார்த்து இருக்கமாட்டார்கள். அவரது அணியின் நிர்வாகத்தினரைத் தவிர. ஆம் போர்ச்சுகல் அணி நிர்வாகம் தான் முழுக்காரணமும். 






நேற்று நடந்த மூன்றாவது கால் இறுதிப் போட்டியானது நடப்பாண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்பட்ட போட்டிகளில் ஒன்று. இந்த போட்டியில், மொராக்கோவுடன் மோதிய போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. போர்ச்சுகல் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் போர்ச்சுகலின் கேப்டனும் நட்சத்திர நாயகனுமான ரொனால்டோவை உள்நோக்கத்துடன் களமிறக்கவில்லை என்பதே ஆகும்.


ரொனால்டோவிற்கு வாய்ப்பு மறுப்பு:


போட்டியின் 42வது நிமிடத்தில் மொரோக்கோ அணி கோல் அடித்தது.  அதன் பின்னர் போட்டியை வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் ரொனால்டோவை 50வது நிமிடத்தில் களமிறக்கியது. அணி தன்னிடம் உள்நோக்கத்துடன் செயல் பட்டாலும், களமிறங்கியது முதல் தனது உலகக்கோப்பைக் கனவு, ஒட்டுமொத்த போர்ச்சுகலின் பெரும் கனவை மனதில் கொண்டு விளையாடினார்.


ஆனால், பெரும் லட்சியத்துடன் விளையாடியவருக்கு பலன் கிடைக்கவில்லை. மொராக்கோ அணியும் தனது உச்சபட்ச ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரொனால்டோவை சுற்றி வளைத்து தடுத்துக்கொண்டே இருந்தது. இதனால் போட்டியின் முடிவு மொராக்கோவுக்கு சாதகமாக மாறியது. போட்டியில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் உலக்கோப்பை கனவையும் கைவிடவேண்டிய நிலைக்கு ரொனால்டோ ஆளானார். போர்ச்சுகல் அணி ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாத நிலையில், உலகக்கோப்பையை வென்று கொடுப்பேன் என சபதம் ஏற்றார் ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதார். 


பயிற்சியாளரே முழு காரணம்


கால்பந்து போட்டியைப் பொறுத்தமட்டில் பயிற்சியாளர் முடிவுதான் செயல்படுத்தப்படும். அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ், லீக் சுற்றில் தென்கொரியாவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்த போட்டியில் ரொனால்டோவை பாதியில் வெளியேற்றி மாற்று வீரரை  களமிறக்கினார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.


இந்த மோதலின் நீட்சி  சூப்பர் 16 மற்றும் காலிறுதி போட்டியிலும் பிரதிபலித்தது. சூப்பர் 16 சுற்றில் களமிறக்கப்படாதபோதே ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இது குறித்து எந்தவிதமான கேள்வியும் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ களம் இறக்கப்படாததை கண்டித்து, ரொனால்டோவின் மனைவி, ”மைதானம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரொனால்டோவின் பெயரைச் சொல்லி கத்துவதை நிறுத்தவில்லை, கடவுள் எங்களுக்கு இன்னொரு போட்டியிலும் இதே அதிர்ச்சியை தரட்டும்” என டிவீட் செய்திருந்தார்.


ரசிகர்கள் சோகம்:


தொடர்ந்து ரொனால்டோவை மூன்று போட்டிகளில் அவமானப்படுத்தும் வகையில் நடத்திய பயிற்சியாளரின் உள்நோக்கம், போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை எட்டமுடியாமல் செய்துள்ளது. 37 வயதான ரொனால்டோவுக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை என்பதால் அடுத்த உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், தன்னுடைய உலகக்கோப்பை கனவை கத்தாரில் விட்ட கண்ணீரில் கரைத்துவிட்டார் என்றே கூறவேண்டும். ஏற்கனவே நெய்மரின் பிரேசில் வெளியேறிய நிலையில், தற்போது ரொனால்டோவின் போர்ச்சுகலும் வெளியேறியுள்ளது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.