மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது லீக் தொடர் நேற்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பலமான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடி செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி இரண்டு பந்துகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தபோது, 20வது ஓவரின் 5வது பந்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத்கவுர் தனது விக்கெட்டினை இழந்தார். இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 


அப்போது களமிறங்கிய சஜானா சஜீவன் தான் எதிர் கொண்ட முதல் பந்து என்பதைவிடவும் போட்டியின் கடைசி பந்து, போட்டியின் முடிவை தீர்மானிக்கப்போகும் பந்தினை எதிர்கொண்டார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை தான் சேஸ் செய்த போட்டியில் தோல்வியைச் சந்தித்ததில்லை என்ற சாதனையை தன்னிடத்தில் வைத்துள்ளது. இந்த போட்டியில் இந்த சாதனை கைநழுவிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி, மும்பை அணி பவுண்டரி விளாசி போட்டி டிரா ஆகும். அதனால் போட்டியின் முடிவை சூப்பர் ஓவர் தீர்மானிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரது படபடப்பிற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சஜானா சஜீவன் சிக்ஸர் விளாசி முற்றுப்புள்ளி வைத்தார். இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். 






சஜானா குறித்து எதிர் அணியில் விளையாடிய ஜெமீமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஜானா குறித்து பாராட்டியும், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு உட்பட அனைத்து உடைமைகளையும் இழந்து, மிகவும் வறுமையை எதிர்கொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார் என பதிவிட்டுள்ளார். 


சஜானா ஒரு கிரிக்கெட் வீராங்கனை மட்டும் இல்லாமல், கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். இப்போது அந்த படத்தில் இவர் பணியாற்றும்போது சிவக்கார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது.