மகளிர் பிரீமியர் லீக் 2024:


இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், யு.பிஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.


 


அரைசதம் விளாசிய ஆலிஸ் கேப்ஸி:


அந்த வகையில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதன்படி, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.  இதில் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ஷஃபாலி வர்மா மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர், மெக் லானிங் உடன் ஜோடி சேர்ந்தார் ஆலிஸ் கேப்ஸி. இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள். இதில், மெக் லானிங் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் பறக்கவிட்டு மொத்தம் 31 ரன்கள் எடுத்து நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஆலிஸ் கேப்ஸியுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.


 


அந்த வகையில் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ஆலிஸ் கேப்ஸி. அந்தவகையில் மொத்தம் 53 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 75 ரன்களை குவித்தார். அதேபோல் மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இதனிடையே சதம் விளாசுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஆலிஸ் கேப்ஸி 75 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்க உள்ளது.