Virat Kohli: கோலி இல்லனா காலிதான் போலயே! வரலாறு அப்படிதான் சொல்லுது மக்களே!
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி 3 முறை மட்டுமே 150க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்துள்ளது. 3 முறையும் விராட் கோலியே இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் அனைத்திலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியிலே தென்னாப்பிரிக்காவுடன் படுதோல்வி அடைந்தது.
கோலோச்சிய கோலி:
டாஸ் வென்ற மார்க்ரம் முதலில் பந்துவீசாமல் பேட்டிங்கைத் தேர்வு செய்யவும், பலரும் அவரை விமர்சித்தனர். ஆனால், அவரது முடிவே சரி என்பது போல போட்டியின் முடிவு அமைந்தது. 188 என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தோற்றதை காட்டிலும் ஆடிய விதம் அனைவரையும் கடுமையாக அதிருப்தி அடைய வைத்துள்ளது.
துளியளவு கூட போராட்டம் இல்லாமல் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து முழுமையாக சரண் அடைந்துள்ளது இந்தியா. இப்போது, இணையம் முழுவதும் விராட் கோலி இருந்திருந்தால் இந்த போட்டி இந்தியாவிற்கு சாதகமாக இருந்திருக்கும் என்ற வீடியோக்களும், கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் இந்திய அணி இதுவரை டி20 உலகக்கோப்பையில் 3 முறை 150க்கும் மேற்பட்ட இலக்கை எட்டியுள்ளது. அந்த 3 முறையும் விராட் கோலியே தனி ஆளாக போராடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
1.தென்னாப்பிரக்காவிற்கு எதிரான 72 ரன்கள்:
2014ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 173 ரன்கள் என்ற வலுவான இலக்குடன் இந்தியா களமிறங்க, ரோகித் சர்மா 24 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் தர, ரஹானே நிதானமாக 32 ரன்களை நிதானமாக எடுக்க தனி ஆளாக அதிரடியும், பொறுப்புடனும் ஆடி 44 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 72 ரன்கள் எடுத்து இந்தியாவை விராட் கோலி வெற்றி பெற வைத்தார்.
2. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 82 ரன்கள்:
மொகாலியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2016ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா இழக்க விராட் கோலி தனி ஆளாக போராடுவார். ஹேசில்வுட், ஃபால்க்னர், வாட்சன், கோல்டர் நைல் ஆகியோர் பந்துவீச்சை சமாளித்து கடைசி வரை அவுட்டாகாமல் 51 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
3. பாகிஸ்தானுக்கு எதிரான 82 ரன்கள்:
மெல்போர்ன் நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் 160 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 31 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழக்க, பாகிஸ்தானுக்கே வெற்றி என்று அனைவரும் கருதிய நிலையில் பொறுப்புடன் ஆடி 53 ரன்களுக்கு 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைப்பார். அதுவும் ஹாரிஸ் ராஃப் பந்தில் விராட் கோலி அடித்த சிக்ஸர் எக்காலத்திலும் சிறந்த சிக்ஸராக போற்றும் அளவிற்கான ஷாட் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.
கோலிக்கு ஏது மாற்று?
இந்த 3 போட்டிகளிலும் விராட் கோலி ஆட்டமிழந்ததே இல்லை. விராட் கோலி சென்ற பிறகு அவரது 3வது வீரர் இடத்தில் திலக் வர்மாவிற்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஆனாலும், விராட் கோலி போல நெருக்கடியான நேரத்தில் அணியை மீட்டு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக மாற்றித் தரும் அளவிற்கு வீரர்கள் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதே சோகமான உண்மை.
இந்த போட்டிகள் மட்டுமின்றி விராட் கோலி ஏராளமான போட்டிகளில் தனி ஆளாக இந்திய அணியை வெற்றி பெற வைத்ததன் காரணமாகவே அவரை சேஸ் மாஸ்டர் என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.




















