கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தானது உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் நிகழ்ந்தது. தனது தாயை சர்ப்பிரைஸ் ஆக பார்க்க சென்ற போது இந்த விபத்து நடைபெற்றது.  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கிய ரிஷப்பை மீட்டு டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.


பண்டிற்கு மூளை மற்றும் தண்டு வடத்தில் எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும் கை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, கடந்த ஜனவரி 6 ஆம் தேதி பண்டிற்கு வலது முழங்காலில் தசைநார் கிழிவு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்தநிலையில், விரைவில் குணமடைந்து இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு முழுவதும் பண்ட் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட்க்கு வலது முழங்காலில் மூன்று பெரிய தசைநார்கள் கிழிந்துள்ளது. இதனால் இந்தாண்டு பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற மாட்டார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”பண்ட்க்கு விபத்தின்போது வலது காலில் மூன்று தசைநார்கள் கிழிந்துள்ளது. அதில், இரண்டு தசைநார்கள் கடந்த ஜனவரி 6ம் தேதி அன்று அறுமை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், இன்னும் ஒரு அறுமை சிகிச்சை இன்னும் செய்யப்படவில்லை. இந்த அறுவை சிகிச்சை செய்ய குறைந்தது 6 வாரங்கள் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முழங்காலின் மூன்று தசைநார்கள் : 



  • முன்புற தசைநார்கள்

  • பின்புற தசைநார்கள்

  • இடைநிலை இணைதசைநார்கள்


ஒரு மனிதன் நடக்க இந்த மூன்று தசைநார்கள் மிக முக்கியம். பண்ட்க்கு இந்த மூன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒன்றை சரிசெய்ய இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


6 மாதங்களுக்கு ஓய்வு :


அடுத்த 6 மாதங்களுக்கு முழு ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ரிஷப் பண்ட் உடல்நிலையை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவரது அனைத்து சிகிச்சை செலவுகளையும் பிசிசிஐ ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கே.எஸ். பாரத் மற்றும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு: 


ரிஷப் பண்ட் விபத்துக்கு பிறகு மும்பையில் உள்ள மருத்துவமனையில் நலமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், இவர் இல்லாத பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கும் பாரத் மற்றும் இஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.