முழங்கால் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ”இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் சொந்த மண்ணிலும் விளையாடமாட்டார். சமீபத்திய ஸ்கேன்கள் மற்றும் அறிக்கைகளைத் தொடர்ந்து பிசிபி மருத்துவ ஆலோசனைக் குழு ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு 4-6 வாரங்கள் ஓய்வளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷாஹீன் ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான சொந்தத் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். 


தொடர்ந்து ஆசிய கோப்பைக்கான ஷஹீனுக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 






கடந்த ஆண்டு நடைபெற்ற உலகப்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது. அன்றைய போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்களை ஷாஹீன் அப்ரிடி அள்ளினார். இதன் மூலம் உலகப்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியே கண்டிராத இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு அது மிகப்பெரிய விமர்சனத்தை கொடுத்தது. 


இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஷாஹீன் அப்ரிடி விலகியதையடுத்து இந்திய ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர். 


















இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.