Amanjot Kaur: உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீராங்கனை வீட்டில் சோகம் - என்ன நடந்தது?
Amanjot Kaur: உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் வீராங்கனை வீட்டில் சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்தியா முழுவதும் மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ப்ரதிகா ராவல், தீப்தி ஷர்மா, ரேணுகா என ஒவ்வொரும் காரணமாக இருந்த நிலையில் மிக மிக முக்கிய காரணம் அமன்ஜோத் கவுர்.
அமன்ஜோத் வீட்டில் சோகம்:
தீப்தி ஷர்மா வீசிய 42வது ஓவரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக தனி ஆளாக போராடிய அந்த அணியின் கேப்டன் லாரா சிக்ஸருக்கு அடித்த பந்தை ஓடி வந்து கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச்சை முதலில் தவறவிட்டு, பின்னர் ஒரு கையில் பிடித்துவிட்டார். அந்த கேட்ச்சிலே இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டது.

100 கோடிக்கும் அதிகமான மக்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமான அமன்ஜோத் கவுரின் வீட்டில் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. அமன்ஜோத் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் சாதிக்க அவருக்கு பக்கபலமாக இருந்தவர் அவரது பாட்டி பக்வந்தி.
என்ன நடந்தது?
சிறுவயது முதலே அமன்ஜோத் கிரிக்கெட் விளையாடுவதற்கு பக்கபலமாக இருந்தவர் பக்வந்தி. மொகாலியில் உள்ள பூங்காக்களில் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும்போது அவருடன் உடன் சென்று அவருக்கு பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தவர் பக்வந்தி. அமன்ஜோத்தின் தந்தை பூபிந்தர் சிங் பலோங்கியில் வேலைக்காக சென்றுவிடும் நிலையில், அமன்ஜோத் வீட்டிற்கு வெளியே சென்று ஆண்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு பக்கபலமாக இருந்தவர் அவரது பாட்டி பக்வந்தி.

அமன்ஜோத் இந்திய அணியில் இடம்பிடித்து உலகக்கோப்பையில் ஆடி வந்த சூழலில், கடந்த மாதம் பக்வந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அமன்ஜோத்தை மிகப்பெரிய கிரிக்கெட்டராகவும், அவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் ஆசைப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் அமன்ஜோத்திடம் மறைத்துவிட்டனர். அவர் கடந்த 25 நாட்களாக மருத்துவமனையில் உள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.
இதைக்கூறினால், அவரது ஆட்டத்திறன் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் கருதியுள்ளனர். இதனால், அவர் உலகக்கோப்பையை வெல்லும் வரை அவரிடம் இதை அவரது குடும்பத்தினர் கூறாமல் மறைத்துவிட்டனர்.
கேட்ச் பிடித்தது எப்படி?
அமன்ஜோத் தான் பிடித்த கேட்ச் குறித்து கூறியதாவது, எங்களுக்கு அந்த கேட்ச் எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். அந்த கேட்ச்சைப் பிடிக்க எனக்கு 2வது வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகப்படுத்தியதை வைத்தே நீங்கள் உணரலாம். நாங்கள் வரலாறு படைத்துள்ளோம். இந்திய கிரிக்கெட் அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது என்பதற்கான தொடக்கம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.




















