IND vs PAK: பவுல் அவுட்டில் பல்பு வாங்கிய பாகிஸ்தான்! முதல் டி20 உலகக்கோப்பையிலே இந்தியா பயங்கரம்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், முதல் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பவுல் அவுட் முறையில் வெற்றி பெற்றதை கீழே விரிவாக காணலாம்.

IND vs PAK T20 World Cup: இன்று இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையில் மோத உள்ளனர். இலங்கையில் உள்ள கொழும்பு நகரத்தின் பிரேமதாசா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளும் ஆசியக் கோப்பைத் தொடரில் மோதியது.
இந்தியா - பாகிஸ்தான்:
பின்னர், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதும் போட்டி இதுவே ஆகும். இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டி என்றாலே எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில், டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் முதன்முதலாக மோதிய போட்டியை யாராலுமே மறக்கவே இயலாது.
மறக்க முடியாத பவுல் அவுட்:
பவுல் அவுட் முறையில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்திய போட்டி அது. 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதலாவது டி20 உலக்கோப்பையில் டர்பன் நகரில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது. தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக், யுவராஜ், கம்பீர் சொதப்ப ராபின் உத்தப்பா 50 ரன்களும், தாேனி 33 ரன்களும் எடுக்க பாகிஸ்தானுக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அணியின் கம்ரான் அக்மல், யூனுஸ் கான், ஷாகித் அப்ரிடி சொதப்ப சல்மான் பட், சோயிப் மாலிக் ஆகியோரின் ஒத்துழைப்பால் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானை வெற்றி பெற வைக்க போராடினார். ஆனால், கடைசி பந்தில் ரன் அவுட்டாக ஸ்கோர் சமனானது.
அசத்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:
கால்பந்து ஆட்டத்தில் பெனால்டி முறையைப் போல, டி20 போட்டியில் பவுல் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. அதாவது, சூப்பர் ஓவருக்கு பதிலாக ஒரு ஓவரை 6 பந்துவீச்சாளர்கள் வீச வேண்டும். பேட்ஸ்மேன்கள் இல்லாமல் வீசப்படும் அந்த ஓவரில் அதிக முறை போல்டாக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்திய அணிக்காக சேவாக் முதல் பந்தை வீசினார். அந்த பந்திலே அவர் போல்டாக்க, பாகிஸ்தான் அணிக்காக யாசிர் அராஃபத் முதல் பந்தை வீசினார். ஆனால் அவர் போல்டாக்கவில்லை. அடுத்த பந்தை இந்திய அணிக்காக அடுத்த பந்தை ஹர்பஜன் வீசி போல்டாக்கினார். பாகிஸ்தான் அணிக்காக அடுத்த பந்தை உமர்குல் வீச, அவரும் போல்டாக்காமல் மிஸ் செய்துவிடுவார்.
கோப்பை வென்று சாதனை:
இந்திய அணிக்காக 3வது பந்தை யாரும் எதிர்பாராத விதமாக ராபின் உத்தப்பா வீசி, ஸ்டம்புகளை தெறிக்கவிட இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கட்டாயம் போல்டாக்க வேண்டிய சூழலில் ஷாகித் அப்ரிடி வீசிய பந்தும் ஸ்டம்பில் படாமல் செல்ல இந்தியா 3-0 என்ற கணக்கில் பவுல் அவுட் முறையில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கி, இந்திய அணி வெற்றி பெற்ற இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.




















