World Cup Warm-Up Match: ஐசிசி நடத்தும் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் மிகவும் பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இதற்காக இந்தியாவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, வங்காள தேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் முகாமிட்டுள்ளன. தொடர் தொடங்குவதற்கு முன்னாதாக ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. 


அதில் இந்தியாவுக்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து அணியுடன் பயிற்சி ஆட்டம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பரஸ்சபர மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. 


போட்டிக்கு இரு அணிகளும் தயாராக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து கனமழை பெய்ததால் ஆடுகளம் தார்பாயால் மூடப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் மழை நின்று விடும் இரு அணிகளும் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மைதானத்தில் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். மழை விட்டுவிட்டு பெய்ததால் போட்டி தொடங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர்.


ஒருகட்டத்தில் போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீண்டும் மழை வரவே, போட்டி நேரம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டு வந்தது. இறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. 


ஏற்கனவே நேற்று அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டாஸ் போடப்படாமலே ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃப்ல்ட் சர்வதேச மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. 


இதே மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டாஸ் போடுவதற்கு முன்னர் இருந்தே மழை பெய்ததால் இந்த போட்டியும் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. இறுதில் போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.