India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதான சூர்யவன்ஷி அறிமுகமாக உள்ளார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பாக ஆடி முடித்துள்ள நிலையில், இந்திய அணி விரைவில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா ( துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, பும்ரா, சாம்சன், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், ஷிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி
சூர்யாவுக்கு கல்தா:
இந்த தொடரில் டி20 உலகக்கோப்பையை இந்திய அணிக்காக பெற்றுத் தந்த சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக நீண்ட நாட்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சியுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திலக் வர்மாவிற்கு துணை கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பையில் அசத்திய சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு அணியில் வாய்ப்பை வழங்கியுள்ளனர்.
Presenting #TeamIndia's T20I squads for the tours of England & Ireland 2026 🇮🇳#ENGvIND | #IREvIND pic.twitter.com/f84kSSAIDf
— BCCI (@BCCI) June 6, 2026
அறிமுகமாகும் சூர்யவன்ஷி:
15 வயதே ஆன அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் முதன்முறையாக வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு முன்பு இந்திய அணிக்காக மிக இளம் வயதிலே அறிமுகமான வீரராக களமிறங்கியவர் என்ற பெருமைய சச்சினிடம் இருந்து சூர்யவன்ஷி பறிக்கிறார்.
ஐபிஎல் தாெடரில் ராஜஸ்தான் அணிக்காக கடந்தாண்டு அறிமுகமான சூர்யவன்ஷி கடந்த வருடமே ஐபிஎல் போட்டிகளில் மிரட்டினார். இந்தாண்டு அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் என பல்வேறு சாதனைகளை படைத்தார். ஹேசில்வுட், பும்ரா, சிராஜ் என பல்வேறு மூத்த வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியுள்ளார்.
இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவிற்கு இனிமேல் இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. வயது மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அசத்திய இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன்கில் மற்றும் அடுத்தடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபிக்காக பெற்றுத் தந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்கள் மட்டுமின்றி முன்னாள் கேப்டனும், ரோகித் தலைமையிலான டி20 உலகக்கோப்பையை வென்ற அணியின் துணை கேப்டன் பாண்ட்யாவிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















