டி20 போட்டி:

கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் நேற்று (ஜூலை 6) நடைபெற்ற போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 7) இந்திய அணி 2வது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. 

சதம் விளாசிய அபிஷேக் ஷர்மா:

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களில் நடையைக்கட்டினார்.

இவரின் விக்கெட்டை தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்தார் ருதுராஜ் கெய்க்வாட். மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டார். அதன்படி மொத்தம் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசி 46 பந்துகளில் 100 ரன்களில் எடுத்து தன்னுடைய சதத்தை பதிவு செய்தார்.

235 ரன்கள் இலக்கு:

இதனைத்தொடர்ந்து அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் ரிங்கு சிங். இவர்கள் இருவரும் அருமையான பார்ட்னர்ப் அமைத்து விளையாடினார்கள். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. கடைசி வரை களத்தில் நின்ற  ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்தார். அதேபோல் ரிங்கு சிங் 22 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்ய உள்ளது.