IND Vs SA, T20 Worldcup Final: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோத உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, பார்படாஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.


இந்தியா Vs தென்னாப்ரிக்கா:


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாகவும், தென்னாப்ரிக்கா அணி முதல் முறையாகவும் முன்னேறியுள்ளது.


தங்களது இரண்டாவது டி20 கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல் ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி, இன்று நடபெற உள்ளது.


ஃபைனலை எங்கு? எப்போது காணலாம்?


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பார்படாஸ் தீவில் அமைந்துள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் செயலியிலும் கண்டுகளிக்கலாம்.


இந்திய அணியின் பலம் பலவீனங்கள்:


நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிரதான பலம் என்பது பந்துவீச்சு என்பதே உண்மை. பும்ரா வழிநடத்தும் பவுலிங் யூனிட்டில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் துல்லியமாக பந்துவீசுவதோடு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் எடுத்து வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் எதிரணிக்கு மிடில் ஓவர்களில் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.


பேட்டிங் யூனிட் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், சரியான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் குவித்து வருகின்றனர். இறுதிக் கட்டங்களில் அக்‌ஷர் படேலும் கைகொடுப்பது அணிக்கு பலன் அளிக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக டி20 உலக் கோப்பையை வெல்ல முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதேநேரம், தொடர்ந்து சொதப்பி வரும் கோலி, ஜடேஜா மற்றும் துபே போன்றவர்களும், இன்று சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வது உறுதி.


தென்னாப்பிரிக்கா அணியின் பலம், பலவீனங்கள்:


நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஒரு தோல்வியை கூடாத மற்றொரு அணியாக தென்னாப்ரிக்கா உள்ளது. இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என சரியான கலவையில் அமைந்துள்ள இந்த அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகிறது. பேட்டிங்கில் டி காக், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசென் மற்றும் மில்லர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ரபாடா, பார்ட்மேன் மற்றும் நோர்ட்ஜே ஆகியோர் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை தந்து வருகின்றனர். இதனால், தென்னாப்ரிக்காவை வீழ்த்துவது இந்திய அணிக்கு அவ்வளவு எளிய காரியமாக இருக்காது என்பதே உண்மை.


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 14 முறையும், தென்னாப்ரிக்கா அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


பார்படாஸ் மைதான புள்ளி விவரங்கள்:


பார்படாஸ் மைதானத்தில் இதுவரை 32 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 19 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 224 ரன்களை குவித்துள்ளது. அதேநேரம், குறைந்தபட்சமாக தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி 80 ரன்களை சேர்த்தது. 


வானிலை அறிக்கை & ரிசர்வ் டே:


வானிலை அறிக்கையின்படி இறுதிப்போட்டி நடைபெற உள்ள இன்று, பார்படாஸ் மைதானம் பகுதியில் நாள் முழுவதும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை ஓவர்கள் குறைக்கப்பட்டும் கூட போட்டியை நடத்த முடியாமல் போனால், ஐசிசி விதிகளின்படி இறுதிப்போட்டிக்காக ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடைபெறும். நாளையும் மழையால் போட்டி முழுமையாக பாதிக்கப்பட்டால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா சாம்பியனாக அறிவிக்கப்படும்.


சரித்திரம் படைப்பாரா கேப்டன் ரோகித்?


கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு வலுவான அணியாகவே திகழ்கிறது. குறிப்பாக, ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது தலைமையிலான அணி இதுவரை வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தொடர்களில், இறுதிப்போட்டி வரை இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இந்நிலையில், இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைப்பார். ஒருவேளை தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றால், அந்நாட்டிற்காக ஐசிசி கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை மார்க்ரம் பெறுவார். 


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா: ரோகித் சர்மா , விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா


தென்னாப்ரிக்கா: ரீஸா ஹென்றிக்ஸ், குயிண்டன் டி காக், அய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கேஷவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, ஆன்ர்ச் நோர்ட்ஜே, பார்ட்மென்