இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போன்று மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 


இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-0 என்று கைப்பற்றி தொடரை முழுமையாக வெல்லும். அதே நேரத்தில் இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது. 


யார் யாருக்கு வாய்ப்பு..? 


இந்திய அணியின் தொடக்க வீரர் சும்பன் கில் சிறப்பான பார்மில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த கில், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். கேப்டன் ரோகிஷ் சர்மாவும் இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அதே சமயம், இலங்கைக்கு எதிரான இரண்டு சதங்களும், வங்கதேச அணிக்கு எதிரான ஒரு சதம் அடித்த கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பெரிய இலக்கை எட்டவில்லை. எனவே, இன்றைய போட்டியில் கோலி தன் ஆட்டத்தை மீட்டு எடுத்து கொண்டு வரலாம். 


டி20 பார்மேட்டில் நல்ல பார்மில் உள்ள சூர்யகுமார் யாதவ் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மிடில் ஆர்டரில் உள்ள ஹர்திக் பாண்டியாவும் தான் யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் இவர்கள் இரண்டு பேரில் யாருக்காவது ஓய்வு அளிக்கப்பட்டு, ரஜத் படிதாருக்கு வாய்ப்பளிக்கலாம். ரோகித் சர்மாவின் முடிவில்தான் ரஜத் இன்றைய போட்டியில் அறிமுகம் ஆகிறாரா..? இல்லையா..? என்பது தெரியவரும். 


உம்ரான் மாலிக் களம் இறங்க வாய்ப்பா..? 


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி அல்லது முகமது சிராஜூக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்குக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் களமிறக்கப்பட்டால், குல்தீப் யாதவ் அமர வைக்கப்படலாம். ஆனால், கடந்த சில போட்டிகளாக குல்தீப் யாதவ் வெளியேற வாய்ப்பில்லை. வாஷிங்டன் சுந்தர் அணியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஒயிட் வாஷை தடுக்குமா நியூசிலாந்து..? 


இந்தியா இந்த போட்டியில் வெற்றிபெற்று ஒயிட் வாஷ் செய்வதை தடுக்க நியூசிலாந்து கடுமையாக போராடும். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த தொடரில் இல்லாத சூழல் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக உள்ளது. நியூசிலாந்தின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் கடந்த 30 இன்னிங்ஸ்களில் ஏழுமுறை மட்டும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். நடப்பு தொடரில் மைக்கேல் பிரேஸ் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதேபோல், ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் மிட்செல் சாண்ட்னரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


கணிக்கப்பட்ட இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் 


கணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி:


ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், டக் பிரேஸ்வெல், லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்.