WTC Final 2023: ஐசிசி தரப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.  லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.


முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில்  146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில்  95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதன் பின்னர் இரண்டாவது நாள் இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர், களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் வேகத்துக்கு தாக்குபிடிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸை இரண்டாவது நாளிலேயே முடித்துக்கொள்ளும் எனும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் இணைந்த ரஹானே ஜடேஜா ஜோடி இந்திய அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டு வந்த நிலையில் ஜடேஜா 48 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் இரண்டாவது நாள் ஆட்டம் முடித்துக்கொளப்பட்டது. 


மூன்றாவது நாள் தொடக்கத்தில் பரத் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ரஹானேவுடன் ஷர்துல் தாக்கூர் இணைந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து வந்தாலும், இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்தவர் ரஹானே தான். இக்கட்டான சூழலில் களமிறங்கிய ரஹானே மிகவும் சிறப்பாகவும் பொறுப்புடனும் ஆடி அரைசதம் விளாசி சிறப்பாக ஆடினார்.  மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தினால் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 89 ரன்னில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த யுமேஷ் யாதவ் தனது விக்கெட்டை இழந்தார்


அதன் பின்னர் ஷர்துல் தாக்கூர் பொறுப்பான ஆட்டத்தினால் அரைசத்தினை எட்டினார். அதன் பின்னர் அவரும் தனது விக்கெட்டை இழக்க, இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 


அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால்  மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. களத்தில் லபுஷேன் 41 ரன்களிலும், க்ரீன் 7 ரன்களிலும் உள்ளனர்.