ICC T20 Ranking: களமிறங்கிய ஆறு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில்  168 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 30-வது இடம் பிடித்துள்ளார். 

 

கடந்த வாரம் முடிவடைந்த சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிறகு சுப்மன் கில் , ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஐசிசி டி20 வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.  சூர்யகுமார் யாதவைப் பொறுத்த வரையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டித் தொடர் என்பது மிகவும் பிரமாதமான தொடராக அமையவில்லை என்றாலும் அவர்,
  தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேனாக தொடர்கிறார்.

 

கில் மூன்று இன்னிங்ஸ்களில் 144 ரன்கள் எடுத்தார், இதில் அகமதாபாத்தில்  ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்தார் , அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  இந்தியா 4 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய  நியூசிலாந்தை 66 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இந்த இமாலய வெற்றி ஷுப்மன் கில்லுக்கு தரவரிசையில் 168 இடங்கள் உயர்ந்து உண்மையிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது எனலாம்.  அவர் வெறும் 6 போட்டிகளில் விளையாடி, 30 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதேபோல் இந்த வரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 39வது இடத்தில் உள்ளனர். 





 






ஹர்திக் அந்த ஆட்டத்தில்  சிறப்பாக பந்து வீசி  16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நியூசிலாந்து தொடரை பொறுத்த வரையில்  ஹர்திக் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். அது அவரை ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை எட்டிப்பிடிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். தற்போது ஹர்திக் பாண்டியா 250 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 252 புள்ளிகளுடன் வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் முதல் இடத்தில் உள்ளார். 

 

அதிரடி ஆட்டம்


கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய சுப்மன் கில், ஒரு போட்டியில் 45 ரன்களையும், மற்றொரு போட்டியில் அரைசதமும் விளாசினார். அதைதொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள்கொண்ட டி-தொடரில், சற்றும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.  ஆனால், ஒருநாள் தொடரின் போது, 70, 21 மற்றும் 116 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதைதொடர்ந்து நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களை ஆழ்த்தினார். முதல் போட்டியிலேயே 208 ரன்களை விளாசியதோடு, அடுத்த இரண்டு போட்டிகளிலும் முறையே 40 மற்றும் 112 ரன்களை சேர்த்தார். அதைதொடர்ந்து, டி-20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியின் போது அபாரமாக ஆடி, டி-20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


மூன்று மாதங்களில் அபாரம்:


கடந்த 3 மாதங்களில் மட்டும் டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சேர்த்து, 2 அரைசதங்கள், 3 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதத்தை சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் பதிவு செய்துள்ளார். இளம் வயதில் 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும், சுப்மன் கில் படைத்துள்ளார். அடுத்தடுத்த சாதனைகள் மூலம்  நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், சுப்மன் கில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். அதோடு, இந்திய அணியில் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் கவனம் பெற்றுள்ளர். ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டுள்ள கில், எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்தவும் வாய்ப்புள்ளது.