தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்தது. அதனைத்தொடர்ந்து, துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல், அஸ்வின் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

 

அணியின் விவரம்:

கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),  சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.

இந்தநிலையில், இந்திய அணியில் அஸ்வின்,பண்ட்,ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டிருந்தபோதும், பும்ரா ஏன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று எல்லார் மனதிலும் ஒரு கேள்வி எழுந்தது. இதையடுத்து முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் இதுகுறித்து விளக்கமளித்தார். 

அதில், "ஜஸ்பிரித் கடந்த சில வருடங்களாகவே வேகப்பந்து வீச்சாளராக எல்லா வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக ஏன் உருவாக கூடாது.

 

பும்ராவிற்கும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்த்தால் தான் அவரது தலைமைப்பண்பு எப்படி என்று தெரியும். 2023 உலக கோப்பை தொடர்வரை இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக ராகுலும் செயல்படுவார்கள். ஒரு தொடரில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. 

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் குறைந்தது 4 முதல் 5 நட்சத்திர வீரர்கள் இருப்பார்கள். ஆனால், இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் 13 முதல் 14 வீரர்களும் நட்சத்திர வீரர்கள் தான். எனவே, சர்வதேச கிரிக்கெட்டில் யார் யார் எந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று தேர்வு குழுவிற்கு தெரியும்" என  தெரிவித்துள்ளார்.