இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் நடத்தப்படுவது போல, ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஸ் லீக். ஐபிஎல் நடத்தப்படுவதற்கு முன்பிருந்தே இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

பிக்பாஸ் லீக்:

உலகில் அதிகளவு கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடு இந்தியா. ஐபிஎல் தொடருக்கு பிறகு டி20 போட்டிகளுக்கான கிரிக்கெட் ரசிகர்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளனர். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு கிடைக்கும் வருவாயைப் போல மற்ற டி20 லீக் தொடர்களுக்கு கிடைப்பதில்லை.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஸ் லீக் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக, ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆஸ்ட்ரோஃப் மற்றும் பிக்பாஸ் லீக் நிர்வாகத்தைச் சேர்ந்த பில் ரிக்பி மற்றும் மார்கோட் ஹார்லி இந்தியா வந்துள்ளனர். 

Continues below advertisement

BBL சென்னையிலா?

இவர்கள் பிக்பாஸ் லீக் கிரிக்கெட்டை குறிப்பாக சென்னையில் நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை வந்த அவர்கள்  சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடனும் நேரில் ஆலோசனை நடத்தினர். 

தற்போது வரை சென்னையில் பிக்பாஸ் லீக் போட்டிகளை நடத்த அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் அதிகளவு ரசிகர்கள் கூட்டம் மைதானங்களில் குவிவதால், ரசிகர்கள் வருகை அதிகளவு உள்ள மைதானங்களைத் தேர்வு செய்து பிக்பாஸ் தொடரின் சில போட்டிகளை இங்கு நடத்த அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சாதகங்கள், பாதகங்கள்:

தற்போது நடந்து முடிந்துள்ள ஆலோசனை மட்டுமின்றி இங்குள்ள பாதுகாப்பு வசதிகள், டிக்கெட் விற்பனை, போட்டி நடத்துவதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் லீக் தொடரை இந்தியாவில் நடத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் சென்று ரசிப்பார்கள் என்பது உண்மை. ஆனால், ஐபிஎல் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியே ஆகும்.

ஏனென்றால், இந்திய அணிக்காக ஆடும் வீரர் ஒருவர் வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் ஆட அனுமதி கிடையாது. அவ்வாறு அவர் ஆட வேண்டும் என்றால் இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு விளையாடலாம். 

வெற்றி பெறுமா?

தற்போது புகழ்பெற்ற இந்திய வீரர்கள் யாரும் பிக்பாஸ் லீக் தொடரில் விளையாடாத நிலையில், இந்தியாவில் இந்த தொடரை நடத்துவதால் பலன் அளிக்குமா? என்பது சந்தேகமே. அதேசமயம், ஐபிஎல் தொடரில் ஆடி பிரபலமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்கள் இந்த பிக்பாஸ் லீக் தொடரில் ஆடுவதால் அவர்களைப் பார்ப்பதற்காக கூட்டம் வருவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது.