மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்! போலீஸ் சோதனையில் கைது... ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்
மாருப்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையில், அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.104 ஆக இருந்தது தெரியவந்தது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிட்னியின் மாருப்ரா பகுதியில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த டேவிட் வார்னர், போலீசாரைக் கண்டதும் தனது வேனை சோதனை மையத்திற்கு சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
முதற்கட்ட சோதனையில் வார்னர் மது அருந்தியது உறுதியானது. இதையடுத்து, மாருப்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையில், அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.104 ஆக இருந்தது தெரியவந்தது. இது ஆஸ்திரேலிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகம் என்பதால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்:
கைது செய்யப்பட்ட டேவிட் வார்னர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸுடன் விடுவிக்கப்பட்டார். வரும் மே 7-ம் தேதி சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளார்
பிஎஸ்எல் தொடர் பாதிக்குமா?
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். மூன்று வெற்றிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது. தனிப்பட்ட காரணத்திற்காக ஆஸ்திரேலியா வந்திருந்தபோது வார்னர் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டாலும், இந்த விவகாரம் அவரது தொழில்முறை வாழ்க்கையில் பெரிய கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
தொடரும் சர்ச்சை:
கிரிக்கெட் களத்தில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், சர்ச்சைகளுக்கும் வார்னருக்கும் நீண்ட காலப் பந்தம் உண்டு. 2018-ம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டது, 2013-ல் ஜோ ரூட்டைத் தாக்கியது என வார்னரின் கேரியர் பல சர்ச்சைகளைக் கடந்து வந்துள்ளது. இப்போது இந்த மதுபோதை கைது சம்பவம், அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















