நாக்பூரில் உள்ள விசிஏ ஸ்டேடியத்தில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றிபெற்ற பிறகு, ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு தம்ப்ஸ் அப் காண்பிக்கிறார்கள் என்று அணி வீரர்களை கடுமையாக சாடினார். 


'தம்ப்ஸ் அப் காட்டுகிறோம்'


இரண்டாவது இன்னிங்ஸில், சனிக்கிழமையன்று ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அணியின் அதிகபட்ச ஸ்கோராக, ஸ்மித் 25 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர, வேறு எந்த பேட்டரும் 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியா ஒரே செஷனில், வெறும் 195 பந்துகளில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் நாக்பூர் டெஸ்டில் தனது 31 வது 5- விக்கெட் ஹாலை எடுத்தார்.


போட்டியின் போது, முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா வீசும் நல்ல பந்துகளுக்கு ஸ்டீவ் ஸ்மித் கட்டைவிரலை உயர்த்திக் காட்டிய சில தருணங்கள் இருந்தன, இதுதான் பார்டரின் கோபத்தை ஈர்த்துள்ளது. “தீவிர முனைப்புடன் விளையாடுங்கள். அதாவது, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி, பேட்ஸ்மேன் அதனை மிஸ் செய்யும்போது நாம் அவர்களுக்கு தம்ஸ் அப் கொடுக்கிறோம். என்ன நடக்கிறது இங்கே? அது வெறும் அபத்தமானது. முட்டாள் தனமா செய்யாதீர்கள். ஆனால் ஆஸ்திரேலியா எளிதான அணுகுமுறையில் கிரிக்கெட் விளையாடுகிறது. நாம் யாரோ ஒருவருக்கு தம்ஸ் அப் கொடுக்கிறோம்… ப்ளடி ஹெல்,” என்று பார்டர் கூறியதாக ஃபாக்ஸ் கிரிக்கெட் தெரிவித்துள்ளது.



வழியை கண்டுபிடியுங்கள்


ஆஸ்திரேலியா இப்போது சில விஷயங்களை தேட வேண்டும், மீதமுள்ள தொடரில் எப்படி விளையாடுவது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று பார்டர் குறிப்பிட்டார். "இப்போது நிறைய வடுக்கள் உள்ளன, இது ஒரு கடினமான சில நாட்களாக இருக்கும். நீங்கள் பேசலாம், ஆனால் இறுதியில் கையில் பேட் மற்றும் பந்துதான் வேலையைச் செய்ய வேண்டும். வழியைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்.


ஆனால் அவர்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். எல்லாவற்றையும் துடைத்தெறிய முயற்சிக்க வேண்டும். இதனை சரி செய்ய ஒரே ஒரு வழி இருக்கிறது, ”என்று அவர் மேலும் கூறினார். இடது கை பேட்டர் டிராவிஸ் ஹெட்டை நாக்பூர் டெஸ்டில் தவிர்க்கும் முடிவில் குழப்பமடைவதாக குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவின் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம் 'குழப்பம்' நிறைந்ததாக இருக்கும் என்பதை நிரூபித்த தருணம் இது என்று குறிப்பிட்டார். 


தொடர்புடைய செய்திகள்: IND-W vs PAK-W : மகளிர் டி20 உலகக்கோப்பை: மந்தனா இல்லாமல் களம் இறங்கும் இந்தியா! பாகிஸ்தானை வெல்லுமா?


ட்ராவிஸ் ஹெட் ஏன் இல்லை?


மேலும் பேசிய அவர், "டிராவிஸ் ஹெட் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களுக்கு நிச்சயமாக இருந்தது. சந்தேகத்திற்கிடமான பிட்ச் பற்றிய பேச்சு அதிகம் இருந்தது. ஆனால் இந்திய அணி ஆடுகளத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.


"கண்டிப்பாக இந்த பிட்ச் ஒரு ஸ்பின் ட்ராக்காக இருக்கும் என்பது நமக்கு முன்பே தெரியும், பின்னர் ஏன் அதற்கேற்றார் போல தயாராகவில்லை என்ற மர்மம் எனக்குத் தெரியவில்லை. அது எனக்கு ஒரு வித்தியாசமான ஒன்றாக இருந்தது. இடது புரா ஆடுகளம்தான் அதிகம் ஸ்பின் ஆகிறது என்கிறீர்கள். அப்போதும் டிராவிஸ் ஹெட்டை இறக்காதது, அவர்கள் குழப்பமாக இருந்தார்கள் என்பதற்கு சரியான உதாரணம் என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.



பந்துவீச்சில் அதிக முயற்சிகள் எடுக்கவில்லை


இந்தியாவை குறைந்த ரன்களுக்குள் வெளியேற்றுவதற்கு இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா அதிக முயற்சிகளை எடுக்கவில்லை என்று பார்டர் மேலும் சுட்டிக்காட்டினார், மார்னஸ் லபுஷேனின் பகுதி நேர லெக்-ஸ்பின் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினார். ஆஸ்திரேலியா இந்தியாவை 168/5 என்று வீழ்த்தியது, ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் முறையே 70 மற்றும் 84 ரன்கள் எடுத்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 37 ரன்கள் எடுத்து இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 400 க்கு எடுத்துச் சென்றார்.


இதன் மூலம் இந்திய அணி 233 ரன்கள் என்ற கணிசமான முன்னிலை பெற்றது. அதுவே இந்த டராக்கில் ஒரு இன்னிங்ஸ் வெற்றிக்கு போதுமானதாக இருந்தது. "இரண்டாம் நாளில் லபுஷேன் நிச்சயமாக அதிக ஓவர்கள் வீசியிருக்கலாம். அவர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். சில நேரங்களில் முழு நேரமும் பந்துகளை வீச முடியும், அதன் மூலம் அவர் சில விக்கெட்டுகளையும் எடுக்க முடியும். அந்த இன்னிங்ஸ் முழுவதும் அவர் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை" என்று பார்டர் கூறினார்.


டாட் மர்ஃபி


அறிமுக ஆட்டக்காரர் டோட் மர்பி 7/124 எடுத்ததைத் தவிர, ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் நாதன் லயன் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் மட்டுமே எடுத்தது, பார்டரை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. “அறிமுக ஆட்டக்காரர் 7 விக்கெட்டை எடுத்தார் என்பதில் இருந்து, வேறு பந்துவீச்சு திறன் நம்மிடம் இல்லை என்பதை அறிய முடிகிறது. அடுத்தடுத்த போட்டிகளின் நிலை என்ன, ஏனென்றால் மர்ஃபி தொடர்ந்து விளையாடப் போவது போல் தெரிகிறது, மேலும் இந்த கட்டத்தில் நீங்கள் நாதன் லயனை கைவிடப் போவதில்லை. எனவே, நாம் என்னதான் செய்வது?, ”என்று அவர் கூறி முடித்தார்.