Asia Cup 2023: இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. 


இம்முறை ஆசிய கோப்பைத் தொடரில், தொடரை நடத்தும் அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா, வங்காள தேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் நேபாளம் அணி முதல் முறையாக ஆசிய கோப்பைத் தொடரில் களம் காண்கிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது, இந்தியா பாகிஸ்தான் மோதல் தான். 


இந்தியாவும் பாகிஸ்தானும் சிறப்பாக  குரூப் சுற்று தொடங்கி சூப்பர் 4 போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதமுடியும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தொடரில் களமிறங்கியுள்ள மற்ற 6 அணிகளில் 5 அணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ள உலகக்கோப்பை போட்டியிலும் மோத உள்ளதால் ஒவ்வொரு அணியும் மற்ற அணியை வீழ்த்த பல்வேறு யுக்திகளைக் கையாளும். 





இந்திய அணியைப் பொறுத்த வரையில் காயமடைந்த வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால், இந்திய அணி தனது முழு பலத்தையும் சோதனை செய்து கொள்ள இந்த தொடர் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை, பவுலிங் வரிசை என அனைத்தும் பேப்பரில் மிகவும் வலுவாக இருப்பதைப் போன்று காணப்பட்டாலும், களத்தில் எப்படி இருக்கும் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் தான் தெரியவரும். 




இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களாக திகழும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து இதுவரை தாங்கள் விளையாடிய போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 ஆயிரத்து 998 ரன்கள் சேர்த்துள்ளனர். நாளை நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர்கள் இருவரும் இணைந்து 2 ரன்கள் எடுத்தால் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையைப் பெறுவர். இதற்கு முன்னர் 5 ஆயிரம் ரன்களை 7 பார்ட்னர்ஷிப் ஆட்டக்காரர்கள் எடுத்துள்ளதால் இவர்கள் இருவரும் 5 ஆயிரம் ரன்களை எட்டினால் 8வது பார்ட்னர்ஷிப் ஆட்டக்காரர்களாக பதிவு செய்யப்படுவர். இவர்கள் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். 85 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள இவர்கள் 4 ஆயிரத்து 998 ரன்கள் சேர்த்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு போட்டியில் 246 ரன்கள் அடித்தது இவர்களின் பார்ர்னர்ஷிப்பில் அதிகபட்ச ரன்களாக பதிவாகியுள்ளது. 5 ஆயிரம் ரன்கள் பார்ட்னர்ஷிப் என்ற சாதனையில் ஏற்கன்வே ஷிகர் தவானுடன் இணைந்து ரோகித் சர்மா படைத்துள்ளார். இவர்கள் இருவரும் 117 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரத்து 197 ரன்கள் எடுத்துள்ளனர்.