இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ராஜ்கோட்டில் நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், ரவிசந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். இருப்பினும், இந்த சாதனைக்கு பிறகு, அஸ்வின் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார். 


அஸ்வின் தனது குடும்பத்தில் ஏதோ எமர்ஜென்சி என்று கூறி, ராஜ்கோட்டில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். 


பிசிசிஐ சொன்னது என்ன..? 


சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முழுமையாக விளையாடமாட்டார் என கூறப்பட்டது. இதையடுத்து, அஸ்வின் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்து கொண்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், குடும்ப நெருக்கடி காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், அணியும் அஸ்வினுக்கு முடு ஆதரவை தரும். பிசிசிஐ மற்றும் அணி அஸ்வினுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என தெரிவித்திருந்தார். 


500 விக்கெட்களை தனது தந்தைக்கு அர்ப்பணித்த அஸ்வின்: 


ராஜ்கோட் டெஸ்டின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் குரோலியை அவுட் செய்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை பூர்த்தி செய்தார். இந்த சாதனைக்கு பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின், "இது மிக நீண்ட பயணம். எனது 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என் தந்தை எனக்கு ஆதரவாகவே இருந்தார். என் அப்பாவால்தான் நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்க முடிந்தது. எனது தந்தையின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இருப்பினும், எனது பந்துவீசுவதை அவர் கண்டிப்பாகப் பார்ப்பார் என நம்புகிறேன். அவர் இப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்” என பேசினார். 


விராட் கோலிக்கு அடுத்த அஸ்வின்: 


இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விலகிய முதல் வீரர் அஸ்வின் அல்ல. இவருக்கு முன், தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். இந்த இரண்டு வீரர்கள் இல்லாதது, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகப்பெரிய சிக்கலை இந்திய அணிக்கு கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. 


ராஜ்கோட் சோதனையில் இதுவரை என்ன நடந்தது?


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இந்தியாவின் 445 ரன்களுக்கு பதிலடியாக, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 8 ரன்களுடனும் கிரீஸில் உள்ளனர். அதேசமயம், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளனர்.