சீனாவில் இன்று தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.


19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:


ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி, கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்கும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி, அக்டோபர் 8ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.


தொடக்க விழா:


போட்டியின் தொடக்க விழா ஹாங்சோவில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பல நாட்டு தலைவர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். அதேநேரம், போட்டியில் பங்கேற்க அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த வீரர்களுக்கு சீனா விசா வழங்க மறுத்ததால், தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த இந்திய விளையாட்டு அமைச்சர் தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார். தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளனர். தொடக்க விழா நிகழ்ச்சிகளை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, 3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


45 நாடுகள் பங்கேற்பு:


அடுத்த 15 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த போட்டிகளில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர் விராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெற்ற, 18வது ஆச்ய விளையாட்டுப் போட்டிய்ல் பங்கேற்றவர்களை விட அதிகமாகும். ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா, சீனா, ஜப்பான்,  இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, இலங்கை, கத்தார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும்  ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன. 


விளையாட்டுப் போட்டிகள்:


மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 


இந்திய அணி நிலவரம்:


இந்திய சார்பில்  39 விளையாட்டுகளில் பங்கேற்க 655 வீரர், வீராங்கனைகள் ஆசிய போட்டிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, குத்துச்சண்டை வீராங்கனைகள் நிகாத் ஜரீன், லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை அன்திம் பன்ஹால், குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, வில்வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம், ரோகன் போபண்ணா (டென்னிஸ் இரட்டையர்) உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கபடி, கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், செஸ் ஆகிய போட்டிகளிலும் இந்தியா பதக்கவேட்டை நடத்த வாய்ப்புள்ளது.  2018ம் ஆண்டில் இந்தியா 16 தங்கம் உள்பட 70 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இந்த முறை 100 பதக்கங்களுக்கு மேல் குறிவைத்து உள்ளது.  


ஆசிய போட்டிகள் வரலாறு:


ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறையும் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.  இந்த நிலையில் தான் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 1990, 2010-ம் ஆண்டுகளில் அங்கு இந்த போட்டி நடைபெற்ற நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியை சீனா நடத்துவது இது 3-வது முறையாகும்.