Vinayagar Chathurthi 2025: விழுப்புரம் மாவட்டத்தில் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் முன்அனுமதி பெற்றுள்ளனர். இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி வழிபடும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை  27-ந் தேதி புதன்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வழிபாட்டுக்காக தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட பொதுமக்கள் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும், கோவில்கள் சார்பிலும் பிரமாண்ட சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த பல்வேறு இந்து அமைப்பினர் தயாராகியுள்ளனர். அதாவது ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறிய அளவிலான சிலைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச்செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4 அடிக்கு மேல் உயரமுள்ள சிலைகளை வழிபாட்டுக்குழுவினர் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். சதுர்த்தி விழா முடிவடைந்த பின்னர் முன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம்.

விநாயகர் சிலை கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு

அதற்காக கிழக்கு கடற்கரை மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரையுள்ள இடங்களான பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் வசவன் குப்பம், தந்திராயன் குப்பம்  மற்றும் அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம், வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி 2025 - பூஜை செய்ய சிறந்த நேரம் எது?

எப்போது , எப்படி கொண்டாட வேண்டும்..?

தேதி- 27 ஆகஸ்ட் 2025 

பத்ர சுக்ல சதுர்த்தி தேதி தொடங்குகிறது - ஆகஸ்ட் 26 மதியம் 1:54 மணி

பத்ர சுக்ல சதுர்த்தி தேதி முடிவடைகிறது - ஆகஸ்ட் 27 பிற்பகல் 3:44 மணி சுக்ல யோகம் - ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 28 வரை மதியம் 12:35 முதல் மதியம் 01:18 வரை

பிரம்ம யோகம் - ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 29 வரை மதியம் 01:18 முதல் 02:13 வரை 

ராகுகாலம் - மதியம் 12:22 முதல் 01:59 வரை 

நண்பகல் பூஜை நேரம் - ஆகஸ்ட் 27 காலை 11:05 மணி முதல் மதியம் 01:40 மணி வரை.

ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது....

ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01.40 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரமாக குறிப்பிடப்படுகிறது...

27ம் தேதி மாலையில் சதுர்த்தி திதி இருக்காது என்பதால் காலை முதல் பகல் வரையிலான நேரத்திற்குள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை நிறைவு செய்து கொள்வது நல்லது