உலக பிரசித்திப் பெற்ற திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா ஆலயம் எனப்படும் தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலயம், பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த ஆலயத்தில் இதுவரை 15 முறை தங்க தேரோட்டம் நடந்துள்ளது. கடந்த 2-2-1806ம் ஆண்டு பனிமய மாதாவின் அற்புத சொரூபம் தூத்துக்குடி வந்தடைந்ததின் 250வது ஆண்டு நிறைவாக முதல் முறையாக தங்க தேரோட்டம் நடந்தது. கடந்த 2013ம் ஆண்டு 15வது தங்க தேரோட்டம் நடைபெற்றது.




வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் சிறப்புகளுக்கெல்லாம் மணி மகுடம் சேர்ப்பது 1806ம் ஆண்டு இப்பேராலயத்தின் பரதகுல மக்களால் வடிவமைக்கப்பட்ட தங்கத்தேர். தேவமாதாவின் சிறிய பக்தி முயற்சியான ஜெப மாலை பக்தியை குறிக்கும் வகையில் 53 அடி உயரத்தில் பல்வேறு வேதசத்தியங்களின் வெளிப்பாடாக தங்கத்தேரானது பரதகுலத் தலைவர் சிஞ்ஞோர்டோம் கபிரியேல் தெக்குருஸ்வாஸ் கோமஸ் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த கலை நுட்பத்துடனும், வேதசாஸ்திர வெளிப்பாடாகவும் பரதகுல சிற்பி நேவிஸ் பொன்சேகர் தங்கத்தேரை செய்து முடித்தார்.






தேவமாதாவின் சுத்திகரிப்பு திருவிழாவான பிப்ரவரி 2ம் தேதி 1806ம் ஆண்டு பனிமயமாதாவின் அற்புத சுரூபம் திருமந்திர நகர வீதிகளில் முதன் முதலாக தங்கத்தேரில் பவனி வந்தது. மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்புகள் நிறைந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளதாக உருவாக்கப்பட்டு உள்ளது.




தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மறைமாவட்டம் துவங்கியதன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்தாண்டு திருவிழாவில் பனிமய அன்னையின் தங்க தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தங்க தேரோட்டத்திற்கான அனைத்து பணிகளும் ஆலய வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் தங்க தேர் அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா வரும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.




பிலிப்பைன்ஸ் தலைநகரில் இருந்து தூத்துக்குடிக்கு செயின்ட் ஹெலேனா என்ற கப்பலில் கடந்த 1555ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பனிமய மாதா சொரூபம் வந்தடைந்த தினத்தை தூத்துக்குடி மறைமாவட்ட மக்கள் புனித தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சுபநிகழ்ச்சிகளை இன்றளவும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டும் 16வது தங்க தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 9ம் தேதியன்று தங்க முலாம் பூசுவதற்காக மாதா சொரூபம் உரிய திருப்பலி, வழிபாடுகளுக்கு பின்னர் பீடத்தில் இருந்து இறக்கப்படுகிறது.




தொடர்ந்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக இரு நாட்கள் வைக்கப்படுகிறது. வரும் 11ம் தேதி போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி வருகை தந்து, முலாம் பூசும் பணிகளை துவக்கி வைக்கிறார். இதையடுத்து மாதா சொரூபம் பல்லக்கில் ஏற்றி அருகில் உள்ள தஸ்நேவிஸ்மாதா துவக்கப்பள்ளியில் உள்ள தனியறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அன்னைக்கு தங்க முலாம் பூசப்படுகிறது. இந்த அறைக்குள் முலாம் பூசும் பணியாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த பணிகள், 10 முதல் 15 நாட்கள் வரையில் நடக்கும். அதன் பின்னர் பனிமய அன்னையின் சொரூபம் மீண்டும் ஆலயத்தில் அவருக்குரிய சிம்மாசனத்தில் அமர்த்தப்படுகிறது.