மயிலாடுதுறை, காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. 1.துலா கட்ட விஸ்வநாதர், 2.திருவழந்தூர் விஸ்வநாதர், 3.வள்ளலார் விஸ்வநாதர், 4.படித்துறை விஸ்வநாதர், 5.பெரிய கோயில் விஸ்வநாதர், 6.கூறைநாடு விஸ்வநாதர், 7.தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவி உடன் புதிதாக கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 





இதனை ஒட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து, 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி  நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மகா பூர்ணாகுதியுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 




தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களின் மூலவர் சிலைகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. கொட்டும் மழையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தருமபுர ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாகுறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திருப்பனந்தாள் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று  சுவாமி தரிசனம் செய்தனர்.




மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மேலும் சில கோயில் கும்பாபிஷேகம் விழாக்கள்.


ஆக்கூர் ஊராட்சி ஆக்கூர் முக்கூட்டில் உள்ளது முத்து முனீஸ்வர கோயில். இந்த கோயில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 29 -ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 4- கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு. மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோயிலை வளம் வந்து விமான கலசங்களை அடைந்தன. தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27 -வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் செம்பனார்கோயில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.




 


இதேபோல் கிள்ளியூர் ஊராட்சியில் உள்ள மன்மதன் கோயிலில் கடந்த 30ஆம் தேதி யாகசாலைகள் பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 2 கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணா குதி மகாதீபாரனை நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பட்டு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.